Saturday 26 May 2012

காலை உணவு(BREAK FAST)- அவசியமா?



“வரும் போது மலம் கழிக்கலாம்; காசு தந்தால் பின்னிரவிலும் வேலை செய்யலாம்; அழகாய் தெரிவேன் என்றால் அணுசக்தி ரசாயனத்தையும் அள்ளிப்பூசிக் கொள்ளலாம்; ருசியாய் இருக்கும் என்றால் பெயர் தெரியாத வேதிக்கலவையையும் உறிஞ்சி உள்ளம் களிக்கலாம், என்ற மனோபாவம் உச்சி முதல் பாதம் வரை ஒட்டிப்போனதுக்கு இந்த நிலையில்லா அறிவியலும், அதன் நிழலில் நங்கூரமிடும் பெரும் வணிகப்பிடியும்தான் காரணம்.

உலகின் பல வளர்ந்த நாடுகளின் காலை உணவை நிர்ணயிப்பது என்பது ஓரிரு மிகப்பெரிய உணவு நிறுவனங்கள் மட்டுமே!.. “சோள அவலா?..ஓட்ஸ் கஞ்சியா? கோதுமை ரொட்டியா?..கொழுப்பு நீக்கிய பதப்படுத்தப்பட்ட கலவை பாலா?”- எது வேண்டும் உங்களுக்கு? என்ற வணிக முழக்கத்துடன், அந்த அண்ணன்மார் கம்பெனிகள் இப்போது இந்திய காலை உணவையும் கபளீகரம் செய்ய துவங்கி விட்டன. 100 கோடி மக்களின் காலை உணவைக் குறி வைத்து இயங்கும் அந்த சந்தையில் சத்தமில்லாமல் நசுங்கிப்போய் கொண்டிருப்பது நம்ம ஊர் காலை உணவு!

இரவு சந்திரனின் ஆட்சிக்காலம்; பகல் சூரியனுக்கானது. இரவில் மொத்த பிரபஞ்சமும் குளிர்ச்சியடைவதும், பகல் சூரியனின் வெம்மையால், போர்த்தப்பட்டிருப்பதும், சித்தம், ஆயுர்வேதம், சீன மருத்துவம் இன்னும் ஏனைய பல பாரம்பரிய மருத்துவ முறைகளின் அன்றைய அறிவியல் புரிதல்!  காலையின் குதூகலம் குறித்துப் பாடாத கவிஞன் இல்லை. ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’-என்ற புத்துணர்வு கண் விழிக்கும் சமயம், மனதுக்குள் பொங்கியதென்றால், அன்று உங்கள் வாழ்வின் மற்றொரு மிகச் சிறந்த தினம்.

 குளிர்ந்த இரவில், வெம்மையாய் உடல் தூங்கிப் பின் விழித்த உடன் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தின் வெம்மைக்கு ஏற்றாற் போல் உடல் குளிர, காலை குளியலும் காலை உணவும் வழிநடத்த வேண்டும்.  “காலங்கார்த்தாலே சுரீர்என பில்டர் காபியோ அல்லது சேட்டனின் மசாலா தேனீரோ சாப்பிட்டால் தான் அந்த நாள் இனிக்கும். இன்னும் கூடுதலாய் கக்கூஸில் இருந்து கொண்டு, அந்த மணத்துடன் புகைத்தால் தான் மலமே கழிக்க முடியும், என்ற பிடிவாதம் வந்ததுதான் நம் ஆரோக்கியத்தின் அழிவின் ஆரம்பம்.

காலை உணவும் நம்மைக் குளிர்ப்பிக்க வேண்டும். காலையில் சாப்பாட்டில் கோதுமையில் செய்யும் சப்பாத்தி, கோதுமை ரவா உப்புமா, கோழிக்கறி, கொள்ளுப்பயறு பொதுவாக தவிர்க்கப்பட வேண்டியவை. அதே சமயம் குளிர் காலத்தில், பனிக்காலத்தில் காலை நேரத்தில் இவைகளுக்குச் சிறப்பு அனுமதி உண்டு.

காலை உணவில்  “கோல்டு மெடல் கொடுக்க வேண்டும் என்றால், அது வெண்பொங்கலுக்குத் தான். குளிர்ச்சியான பாசிப்பருப்பும் அரிசியும் சேர்ந்த பொங்கல் குளிர்ச்சியுடன் உடல் ஊட்டம் தருவது. சிறு குழந்தைகளின் உடல் எடை உயர, நோய் எதிர்ப்பு ஆற்றல் கூட்ட, வெண்பொங்கலுக்கு இணை ஏதும் இல்லை. கொஞ்சம் மிளகு, கறிவேப்பிலை, பசுநெய் சேர்த்து பொங்க வேண்டிய வெண்பொங்கலை வரகரிசியில் செய்தால் அது கூடுதல் சிறப்பு. வரகு, சோளம், ராகியெல்லாம் நாம் மறந்துவிட்ட காலை உணவுக்கான பொக்கிஷங்கள். சிறுசோளம்-உளுந்து சேர்த்த தோசை, ராகி இட்லி, தினை அரிசி உப்புமா என செய்து கொடுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, தேசத்தையும் உழவையும் சேர்த்து பாதுகாப்பீர்கள். குழந்தைகளுக்கு காலை உணவில் புரதத்திற்கு முக்கிய இடம் வேண்டும். சத்துமாவுக் கஞ்சி, முளைகட்டிய பாசிபயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்(இஞ்சி சேர்த்து) அவசியம் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம். காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும். சர்க்கரை நோயாளிகள் எனில், குறைவான பழத்துண்டுகளுடன், ராகி உப்புமா, ஒட்ஸ் உப்புமா, கோதுமை ரவை உப்புமா( காய்கறிகளுடன் கிச்சடி போல் சமைத்தது) சாப்பிடுவது நல்லது.

ஓட்ஸ்-க்கு பெரிய உசத்தி ஒய்யாரம் நிறுவப்படுகிறது. அது பணக்கார அப்பாவுக்கு பிறந்த புது ஹீரோவுக்கு, அவர்களே வைக்கப்படும் கட் அவுட் மாதிரிதான். ஓட்ஸை விட மிகச்சிறப்பான  நம்நாட்டு தானியங்கள் நம்மிடையே ஏராளம். பாவம் அவை பிறந்த வீடு ஏழை நாடு என்பதால் புகுந்த வீட்டில் மரியாதை இல்லை; ‘அத்திப்பூக்கள்’- சீரியலை சுமந்து வர கேபிள் டிவியில் அதற்கு இடம் இல்லை;   அலங்கரிக்காத அந்த சிறு தானியங்களில் கஞ்சி, உப்புமா, கிச்சடி இட்லி என சமைத்து சாப்பிடுங்கள். ஓட்ஸுக்கு ஒரு துளியும் குறைவில்லாதவை அவை.

 “காலை உணவா..? நான் டயட்டிங்கில் இருக்கிரேன்.. “கரீனா கபூர்மாதிரி  ‘ஸீரோ ஸைசில் இடுப்பு வேண்டும் எனக்கு!”, என பீரோ சைஸில் இருக்கும் உங்க பிரியாமனவர் சொன்னால் பதட்டப்பட வேண்டாம். காலை உணவு சாப்பிடுவது மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும் என பல வெள்ளைக்கார சித்தப்பாக்கள் பலத்த குரலில் சொல்ல ஆரம்பித்துவிட்ட்தால், அட! அவுகளே சொல்லிட்டாங்க..அப்புறம் என்ன? என நம்ம ஊர்  ‘மேதாவிகள் கேட்டுப்பார்கள். ஆம்! காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று  journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை தவிர்க்கின்றன. அதைப்பார்த்து நம் தாய்மார்களும் என்ன தான் செய்வது என தவிக்கின்றனர். பெற்றோரும் பிள்ளையும் 6 மணிக்கு எழும் பழக்கத்தை முதலில் கொண்டுவாருங்கள். கொஞ்சமாய் விளையாட்டு, பரபரப்பில் உங்களை கோமாளியாக்கி நிறைய ஜோக் என காலையை குதூகலமாக்கி இட்லியை ஊட்டுங்கள். இரவில் அருகில் படுத்து உற்ங்குகையில் சோளக்கொல்லையை ஒலிம்பிக் டார்ச் போல் நீங்கள் சுற்றி வந்த்தை சொல்லி சிரியுங்கள். காலையில்  “இந்த சோளமாமா அது? என சாப்பிடும் போது அது கேட்கும். உங்கள் குழந்தைக்கு காலை உணவு தருவது அறிவியலல்ல. கலை. அந்த கலையை ரசித்து செய்யும் பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே நாளைய வரலாற்றின் ஆரோக்கியமான பக்கங்கள்.

Tuesday 15 May 2012

அம்மாவுக்கான உணவு



“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது.  “பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம். அந்த கணம் முதல், “ நீ சாப்பிடியாப்பா? சாகப்போற போற வயசில் எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?.. நீ முதல்ல சாப்பிடு”-என்று வயோதிகத்தில் கேட்கும் கரிசனமும் தான் அன்னை. கடைசி மூச்சு வரை உணவூட்டும் அந்த அன்னைக்கு என்ன உணவூட்டலாம்?

தாய் எனும் சொல்லுக்கு தயாரான அந்த பிரசவித்த கணம் முதல் கூடுதல் ஊட்ட உணவு முக்கியம். தாய்ப்பாலின் மகத்துவம் பரவலாக ஓரளவு தெரிந்ததில்,  “தாய்ப்பால் கொடு கொடு! என ஊக்குவிக்கும் கணவன் அதைச் சீராக சுரக்கும் தாய்க்கு கொடுக்கும் அக்கறை சில நேரத்தில் கொஞ்சம் குறைவு தான். ஊட்டமான உணவும் உள்ளமும் மட்டும்தான், பாலை சுரப்பித்திட, அந்த அன்னை ஊக்கமாய் சோர்வின்றி இருந்திட உதவும். “பச்சை உடம்புக்காரிஎன நம் பாரம்பரியம் அந்த புது அன்னையை பராமரித்த விதம் அலாதியானது; அறிவியல் மெச்சக்கூடியது. முதல் ஓரிரு மாதங்கள் பத்தியமாய்ச் சாப்பிடச் சொன்னது, தாய்ப்பாலின் குணத்தைக் கூட்ட மட்டுமல்ல, அதை சுரக்கும் அன்னை ஊட்டமாய் இருந்திடவும் தான். அதிக எண்ணெய் ப்லகாரம், முந்தைய நாள் சமைத்த உணவு, சீரணிக்க சிரமப்படும் பலகாரங்களைத் தவிர்ப்பது முக்கியம்.
0-6 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 550 க்லோரியும்; 6-12 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 400க்லோரியும் கூடுதலாக தேவை என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.  ‘அட! ஏற்கனவே, மகவை சுமக்கும் போது 10கிலோ வெயிட் போட்டாச்சு..இன்னும் சாப்பிடவா?.. நான் வெயிட் குறைக்க டயட் செய்யலாமா? என கேட்கும் புது அம்மாக்கள் இன்று அதிகம். புது அன்னை டயட்டிங்கில் போகவே கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பருவத்தில், பல மகளிர் இயல்பாக எடை குறைவது நடக்கும். பிரசவித்த வயிறு தொளதொளவென தொப்பையாகத் தொங்கி தங்கிவிடாமலிருக்க, நல்ல யோகாசனப்பயிற்சி, பட்டி கட்டுதல் எனும் பழக்கம் நிச்சயம் உதவிடும். அருகாமை சித்தமருத்துவரை அணுகி அதற்கென ஆலோசியுங்கள். 6-7 மாசம் விட்டுவிட்டு, அப்புறமாய்ச் சிற்றிடை கனவில் சிலாகிக்க முடியாது..(எப்போதுமே சிசேரியன் செய்யாத ஆண்களின் தொப்பை வேறு விஷயம்!)
கால்சியமும், விட்டமின் சத்தும், இரும்புச் சத்தும், புரதமும் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் தாயப்பால் கொடுக்கும் காலத்தில் கூடுதலாய் அன்னைக்கு அவசியம் தேவை. காலையும் மாலையும் பால், காலைஉணவுடன் அத்திப்பழம்-2; கொஞ்சம் சத்துமாவு கஞ்சி சாப்பிடுவது அவசியம். பஜ்ரா(கம்பு) ரொட்டியுடன் முருங்கைக்கீரை பொறியல் இரும்ப்ச்சத்து குறைவான அம்மாவுக்கு அத்தியும், கம்பும் அவசியம் வேண்டும்.  “ஸ்கூல் பிள்ளைங்களையே கம்பை காட்டக் கூடாது. அடிக்க கூடாதுங்கிறோம்..பிள்ளை தாச்சிக்கு போய் கம்பு அது இதுன்னு மிரட்றீங்களே!னு அடிக்க வர வேண்டாம். இது தானிய வகை கம்புங்க..அதிக இரும்புச் சத்துள்ள இந்த கம்பை வாரம் ஒரிரு நாள் சோறாகவோ அடையாகவோ செய்து சாப்பிட மலசிக்கல் மூலம் தராமல் இரும்புச்சத்து ஏறும். பல அன்னைக்கு பிரசவம் போது மூலனோய் வந்து இரத்தக் கசிவு இருப்பது உண்டு. அத்தியும், முருங்கையும் மலத்தினை இளக்கி மூலத்தையும் போக்கும். இன்னும் பால்சுரப்பைக் கூட்டும் சுறாமீன் புட்டு, பாலளவைக் கூட்டும் சம்பா கோதுமை, கால்சியம் சத்து நிறைந்த ராகி, விட்டமின் சத்து நிறந்த பழங்களும், காய்கறிகளும் நிரைவாக சாப்பிடுவது மிக மிக அவசியம். சதாவரி கிழங்கில் செய்த லேகியம் அன்னைக்கு சித்த மருத்துவம் தந்த வரப்பிரசாதம். உலகளவில் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மூலிகைgalactogogue- இன் முக்கியத்துவம் புரிந்து புது அன்னை ஒவ்வொருவரும் முதல் 8 மாதம் சாப்பிடுவது அவர்களையும், அவரது செல்ல மகவையும் போற்றிப் பாதுக்கும். தாய்ப்பால் தரும் அன்னைக்கு தண்ணீர் ரொம்ப முக்கியமான உணவு. நீர் கூடுதலாக 1½ லிட்டர் குடிக்க வேண்டும்.
பிரசவித்த அன்னைக்கு, மகிழ்வின் உச்சத்திலுள்ள கணவனும், மாமியாரும், அன்னையும் இயல்பாய் கூடுதல் அக்கறை காட்டுவது இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இயல்பு. அவள்தம் மகப்பேற்றில் அங்கீகரிக்கப்படுபவர் அவர்களுமல்லவா? அதனால் இயல்பாகவே கரிசனம் கூடுதலாய்த்தான் இருக்கும். ஆனால் அதன்பின் என்னைப்பொறுத்த மட்டில், மெனோபாஸ் சமயத்தில் நிற்கும் அம்மாதான்   அநேகமாக அதிகம் நிராகரிக்கப்படும் அம்மா. கொஞ்சம்  ‘பிடித்தம் குறைந்து போன கணவன், தனக்குள் நிகழும் எரிந்து விழ வைக்கும் ஹார்மோன் மாற்றம், டீன் துள்ளலில் எதற்கெடுத்தாலும் ‘நண்பேண்டா! என வீட்டை மறந்து திரியும் பிள்ளைகள், இவற்றுடன், பஸ் ரயிலேறி அலுவலகத்திற்கு வந்தால் புன்னகைக்க கூட மறுக்கும் சக ஊழியர்கள் என மெனோபாஸ் அன்னைக்கு சவால்களும்  சங்கடங்களும் அதிகம்
40க்கு மேல் வரும் இந்த நாட்களில் அந்த அன்னைக்கு ஈஸ்ட்ரோஜன் சத்து நிறைந்த உளுந்து, சோயா, ஓட்ஸ் உணவும் கூடுதல் கால்சியம் உள்ள ராகி, முருங்கை, முட்டை, பால், பச்சைப்பட்டாணி, அவரை, மீன், விட்டமின் ப் நிறைந்த அவரை, விட்டமின் சி நிறைந்த பெரிய நெல்லி அவசியம் வேண்டும். இப்போது அதிக அவசியம் என அறியப்படும் ஒமேகா 3 சத்து நிறைந்த ஃப்லேக்ஸ் விதைகள், மீன் எண்ணெய் மிக அவசியம். ஃப்ளேக்ஸ் விதைகளை பொடி செய்து 1ஸ்பூன் அளவு மோரில் தினசரி சாப்பிடலாம்.மாதவிடாய் முடியும் சமயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து , குறிப்பாய் ஆஸ்டியோபோரோசிஸ், மார்பு புற்று, கருப்பை கழத்து புற்று இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வது இப்போது மிக மிக அவசியம். சமீபத்திய புள்ளி விவரங்கள் எல்லாம் மிரட்டுவது பெண்ணில் இவ்வயதில் கிடுகிடுவென பெருகி வரும் புற்றைப்பற்றித்தான்.
அடுத்து முதுமையான அன்னைக்கு; அவள் உங்கள் குழந்தை. சில நேரங்களில் அந்த முதுமையான அன்னை காட்டும் பிடிவாதம், உங்களுக்கு எரிச்சல் தரக் கூடாது. மலம் சிறுநீர் கழிக்க உங்கள் உதவி தேவைப்படும் போது சிரமமாய் நினைக்க்க் கூடாது. விட்ல பிள்ளைங்களுக்கு வாங்கி வச்ச நொறுவல வயசு காலத்துல சாப்பிட்டுடு இப்ப சங்கடப்படறாது யாரு?ன்னு, சொல்லிக் 

காட்டக் கூடாது. டயப்பர் இல்லாத காலத்தில் உங்களை பஸ்சில் தூக்கிக் கொண்டு போகும் போது இடுப்போடு நீங்கள் இருந்த மலத்தை அவள் அசிங்கமாக நினைக்காமல், அணைத்து தூக்கிவந்து பார்த்ததை மறந்துவிடக் கூடாது. முதுமையான அன்னைக்கு, உணவுத் தேவை அளவில் குறையும். அளவில் குறைந்த அந்த உணவு கால்சியம், விட்டமின் சத்து நிறைந்ததாக லோ கிளைசிமிக் தன்மையுடன் இருக்க வேண்டும். நெய் போடாத பொங்கல், கீரை கூட்டுடன் சப்பாத்தி, புதினா, மல்லி சட்னியுடன் இட்லி, நீர்க் காய்கறிகளின் கூட்டு, கூழாக பிசைந்த புழுங்கலரிசி சாதம், மாலையில்  நன்கு ஊற வைத்த சிகப்பரிசி அவல், இரவில் எளிதில் செரிக்க வைக்கும் இட்லி அல்லது அரிசிக்கஞ்சி, சிறு வாழைப்பழம் அவர்களுக்கான உணவு. மோர் குடிப்பது பாலைக் காட்டிலும் அவர்களுக்கு நல்லது.
அன்னை உணவூட்டுவது மரபு. அன்னையின் நலம் கருத்தில் கொண்டு, சான்றோன் என உலகம் நம்மைச் சொல்ல, அவள்  நமக்குச் செய்த தியாகங்களை கொஞ்சம் நினைவில் கொண்டு, சின்னதாய் ஒரு கவளம் அவள்தம் முதுமையில் ஊட்டிவிடுங்கள். அவள் தன் வாழ்வில் பெறும் உச்சகட்ட வசந்தம் அது!