Tuesday 24 April 2012

10th Siddha , Yoga and Varma national Conference

Tenth Siddha , Yoga and Varma National Conference held at Pillayarpatti Agasthiyar Physiotherapy Herbal Centre near Tanjavoore on 13,14,and 15th april 2012 .

It is quite useful to AHM NGO. In this three day national conference AHM NGO contact so many siddha , Herbal and Varma Doctors. It is quite quite useful to AHM NGO future herbal and food processing project.  

Monday 23 April 2012

சீரகம்- உடலை காக்கும் உன்னத உணவு





அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் எனற காரணப் பெயர் என்பர் தமிழ்ச் சித்தர்கள்..ரோம், லத்தீன், கிரேக்கத்திலிருந்து வந்தது இந்த மணமூட்டி என்று வரலாறு கூறுகிறது. உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

வறண்டு விரிந்து வெடித்த கரிசல் காட்டு பூமியை பாரதிராஜாவின் படத்தில் பார்க்கும் போது , பின்னணியில் இளையராஜாவின் இசையை சேர்த்ததும் மனதைப் பிழிந்து உலுக்கும் உணர்வு வருமே, அது போல சமையலில் மிளகு மிளகாய்வற்றலுடன் சீரகம் சேர்த்தவுடன் பட்டையைக் கிளப்பும் வாசனையைத் தருவது தான் இதன் சிறப்பம்சம். அந்த மணத்தின் மகோன்மதம் அறிந்ததால், ஒரு சமயம் கிரேக்கத்தில் வரிக்குப் பதிலாக சீரகம் செலுத்தலாம் என்ற அரசாணை அந்த காலத்தில் இருந்ததாம். இன்று சீரகம் உலகை ஆளும் ஒரு உன்னத மணமூட்டி. நம்ம ஊர் ரசம், வடக்கின் மலாய் கோஃப்தா மட்டுமல்ல.. டச்சு நாட்டின் சீஸ் உணவு, மெக்ஸிகோவின் பரிட்டோஸ், மொரோக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவிலும் சீரகம் முக்கிய மணமூட்டி!

கிரேக்கத்திலும் மற்ற பிற நாட்டிலும் மனசுக்கும் நாவிற்கும் பிடித்தவையாக மட்டும் பார்க்கப்பட்ட சீரகம் நம்மவருக்கு, உடலுக்கான நோய் தீர்க்கும் மருந்தாகவும் பார்க்கப்பட்டதுதான் தனிச்சிறப்பு. ஆம்.. சீரகம் வெறும் வாசம் தரும் வஸ்து மட்டுமல்ல..வாழ்வை வசந்தமாக வைத்திருக்க, ஆணுக்கும் பெண்ணுக்கும் பல நோய்களிலுருந்தும் காக்கும் அமிர்தமும் கூட. இன்று உலகை உலுக்கும் சர்க்கரை வியாதியில் இருந்து, இன்னும் பல வியாதிக்கு வராது தடுக்கும் நோய்க்காப்பான் சீரகம்.

 “போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங்
காசமிராதக் காரத்திலுண்டிட“
- என்று தேரன் வெண்பாவில் அன்று நோயெல்லாம் வராது காக்க போசனகுடோரி என்று போற்றப்பட்டது சீரகம். பித்த நோய்களுக்கெல்லாம் முதல் மருந்தாக போற்றப்பட்ட சீரகம், அசீரணம், கண் எரிச்சல், ஸைனஸைடிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு என பல நோய்களுக்காக சித்தமருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும் என விடாதிருக்கும் விக்கலுக்கு, திகில் பயமெல்லாம் காட்ட வேண்டாம்! 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.

அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அட்ம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும் இந்த பஞ்ச தீபாக்கினி சூரணம்.

“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது, என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் ¼ ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர்  நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.  “வெந்நீர் காபி போட/ மோர் உறை வைக்கவே நேரமில்லை..எங்க சார் இந்த சாறு எடுத்து, சாங்கியமெல்லாம் பண்றது? என கேட்கும் பிஸி நபர்க்கு, ‘சீரகச் சூரணம் என்றே ரெடிமேடாக சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் சூரணத்தை வாங்கிப் பயன்படுத்துங்கள். விளம்பரமும், விமரிசனமும் பார்த்து ஓடிப்போய் நடுஇரவில் கொடுமையான திரைப்படம் பார்த்து வந்து நடுமண்டை பிளக்கும் மாதிரி வரும் தலைவலிக்கும் இந்த சீரகச்சூரணம் சிறந்த மருந்து.

உள் மருந்தாக மட்டுமல்ல, சீரகம் வெளிமருந்தாகவும் பயன்படும். சீரகத்தை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டு வாரம் ஒருமுறை இரத்தக் கொதிப்பு நோயுள்ளோர், பித்த தலைவலி, கிறுகிறுப்பு உள்ளோர் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நோய் கட்டுக்குள் வரும்.
 “எதை தின்னால் பித்தம் தெளியும்?” என்ற கேள்வி இப்போது அதிகம் இருப்பது நீரிழிவு வியாதியினருக்கு.கவர்மண்ட் ஆபீஸில் கூட அத்தனை ஃபைல்ஸ் இருக்காது. ஒவ்வொரு சர்க்கரை வியாதிக்காரருக்கும் கலர்கலராய் நீரிழிவு நிலையங்கள், அதன் விற்பன்னர்கள் தரும் கோப்புகளைப்பார்த்து கோபத்துடன் இருக்கும் அப்பாவி சர்க்கரையினருக்கு ஒரு செய்தி!  “நீரிழிவு நல்ல மருந்துகளால் மட்டும் கட்டுப்படாது.. வாழ்வியல் மாற்றங்கள், உடற்பயிற்சி, தேர்ந்தெடுத்த சிறப்புணவு(Functional foods) ரொம்ப ரொம்ப அவசியம். சீரகம் அப்ப்டி ஒரு நீரிழிவு நோயினருக்கான தேர்ந்தெடுத்த உணவு”, என்கின்றனர் உணவியல் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள். CUMINALDEHYDE என்ற மணம் தரும் அந்த தாவரகூறு சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டிருக்கிறது என்பது அவர்கள் ஆய்வு முடிவு.
இந்திய தேசிய உணவியல் நிறுவனமான NIN-ஆராய்ச்சியின் முடிவில் சீரகம் மிளகு, க்ரீன் டீ ஆகியன இரத்ததின் AGE-ஐ 40-90 விழுக்காடு வரை கட்டுப்படுத்துவதால் சர்க்கரைக்கு பயன்படுத்தலாம் என்று சான்றளிக்கிறது. 

சர்க்கரை நோய் உருவாக்கப்பட்ட எலியில் சீரகம் தொடர்ந்து கொடுக்கையில் சர்க்கரை நோயின் முக்கியப் பின் விளைவான கண்புரை நோய்(கேடரேக்ட்) வருவது தாமதப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சீரகத்திலுள்ள  ‘விட்டமின் சி மற்றும் ஏ குடல் புற்று வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

பெண்களுக்கு மாதவிடாய் முடிவில் ஆஸ்டியோபோராஸிஸ் ஒரு முக்கிய பிரச்னை. சீரகம் அதன் எலும்ப் புரையோடாமல் தடுக்கும் ஆற்றலால் (osteoporosis protective) இதனை தடுக்கும்.

இன்னும் காச நோய், வ்லிப்பு நோய் இவற்றிலெல்லாம் கூட சீரகத்தின் பங்கு பயனளிக்கும் என்று நவீன ஆய்வுகள் கருதுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம்  நம் முன்னோர் நமக்காக சொல்லிச் சென்ற சூத்திரங்களான சீரகம் சேர்த்த ரசம் தினசரி சாப்பிட மறக்காமல், சீரகத்தை தண்ணீராக, பொடியாக, தைலமாக தேவைகேற்றாற் போல் செய்து வைத்துக் கொண்டு, நலவாழ்விற்கு நங்கூரம் இட்டுக் கொள்ள வேண்டியது மட்டும் தான்!

கோடை வெயிலை எப்படிச் சமாளிக்கலாம்?


கொளுத்தும் கோடை ஒருபக்கம்; புழுங்கவைக்கும் மின்தடை ஒருபக்கம் . எங்கேயாவது ஓடிபோகலாமா? என்ற கேள்வி வராவிட்டால் தான் உடம்பில் ஏதோ பிரச்னை என்று பொருள். கடைசி முழு ஆண்டுத் தேர்வு புவியியல் பரிட்சையில் கடைசி கேள்வியை எழுதி, காவிரி டெல்டா பகுதிய மொட்டை பென்சிலில் பட்டையாக தீட்டி, அப்பாடா! என கொடுத்த நூலில் பேப்பரை கட்டி முடிக்கும் போது வருமே ஒரு பயங்கர சந்தோஷம், இப்போது பரபரப்பாய் டி.வியில் ஒரு கோடி தாரேன்னு சொல்லி, மொக்கையாக வரும் முதல் பத்து கேள்வி தரும் சந்தாசத்தை விட மிக மிக அதிகம்.


அப்போதெல்லாம் மணிமுத்தாறு போலாமா? பானதீர்த்தம் போகலாமா? விவேகான்ந்தர் பாறைக்கு மோட்டார் படகில் போகலாமா? என்பது தான் அதிகபட்ச விடுமுறைத் தலங்கள். அதற்கும் கூட, சமீபத்தில் வேலை கிடைத்து, கல்யாணம் ஆகாதத் தாய்மாமா, சமீபமாய் கல்யாணம் ஆன ஜோரில், எப்போதும் சிரிப்போடு சிலகாலம் மட்டும் இருக்கும் அக்காவும் அவங்க வீட்டுமாமாவும் வீட்டுக்கு விடுமுறைக்கு வரணும். அப்போது தான் டூர் போக முடியும். இப்போது நிலைமை மாறிவிட்டது. 3 நாள் கோலாலம்பூர், 4 நாள் சிம்லா என கடனட்டையை தேய்த்தாவது, விடுமுறையை அளவளாவிக் கொண்டாட கிளம்புகிறோம். குதூகலமாய் விடுமுறை கழிய வேண்டுமென்றால், குதூகலமாய் மனமும், ஆரோக்கியமாய் உடலும் இருக்க வேண்டும். டூர் போற இடத்தில், போற கார்-பஸ் எல்லாம், உவ்வே! என்று வாந்தி எடுத்துக் கொண்டு,  “சார் சார்! வண்டிய கொஞ்சம் ஒரம் கட்டுங்க..போண்டா ஒத்துக்கலைன்னு நினைக்கிரேன்னு, மினரல் வாட்டரை தூக்கிக் கொண்டு மறைவிடம் நோக்கி மறைவது டூரை மொத்தமாய் நாற்றமடிக்கச் செய்யும்.

முதலில் தண்ணீர். எங்கு போனாலும் சுத்தமான தண்ணீர் கையில் வைத்திருப்பது மிக அவசியம். தண்ணீரில் தான் பல தொற்றுக் கிருமிகள் பரவும் அபாயம் உண்டு.காய்ச்சி ஆறிய தண்ணீர்தான் உத்தமம். பிளாஸ்டிக் புட்டியில் வரும் பல பாட்டில்தண்ணீர் ஓடையில் பிடித்து விற்பதாக  ‘யூ டியூபில்கூட உண்மைக்காட்சியை காண்பிக்கிறார்கள். கோடையில் உடலின் நீர்த்துவம் 2% குறைந்தால் கூட, “ இதுக்கு முன்னாடி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே”-ன்னு வீட்டுக்காரரை கலவரப்படுத்தும் குழப்ப வசனம் வரக் கூடும்.குழந்தைகட்கும் முதியோருக்கும் தாக உணர்வு அதிகம் இராது. நாம் தாம் அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும். புட்டியில் விற்கும் கரியமில வாயுகலந்த சோப்புத் தண்ணீரை விட மோர், இளநீர், பழசாறு, பதனீர் கோடையில் நலம் காக்கும் ஆரோக்கிய பானங்கள். நிலத்தடி நீரை நம்மிடையே உறிஞ்சி, பெயர் தெரியாத வேதிக்கலவையை வெளி நாட்டிலிருந்து கொணர்ந்து வந்து கலக்கி, நம்ம ஊர் பிரபலங்களை விலை பேசி நடிக்க வைத்து, விற்கும் அந்த பானங்கள், அதிக விலையில் ஆஸ்டியோபோரோஸிசில் இருந்து இன்னும் பெயர் வைக்காத பல நோயைத் தரும். இனி இந்த கோடையில் உங்கள் உள்ளம் கேட்கட்டும்  “மோர்!”(இங்கிலீஷ் மோர் இல்லைங்க! தமிழ் மோர்..எதுக்கும் தெளிவாய் சொல்லிடலாம்).

அடுத்து கோடை விடுமுறையில் பயணப்படும் இடத்தில் எல்லாம், போற வார வழியில் மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் போண்டா என வாயை மென்று கொண்டே போவது நல்லதல்ல. சில நேரங்களில் அதைத் தயாரிக்கும் கடைக்காரர் எண்ணெய் விற்கின்ற விலையில் ரிபைண்ட் ஆயில் எல்லாம் வாங்காமல், எஞ்சின் ஆயில், பழைய மீந்து போன மூட்டுவலி தைலம் எல்லாம் போட்டு பஜ்ஜி சுட்டுத் தருவதாக கேள்வி. டூர்-னா கொறிக்க இல்லாமலா? என சண்டை கட்டுவோருக்கு, தயவு செய்து கொறீக்க சுவைக்க நல்ல தின்பண்டங்களை வீட்டில் தயாரித்தோ, சுத்தமாய்த் தயாரிக்கும் லாலா கடையிலோ வாங்கி வாருங்கள். ஆனால் வழியெங்கும் தின்று கொண்டே போய், தாஜ்மகால் முன் நின்று, மசாலாகடலை நல்லா மொறு மொறுன்னு இருக்குல்லே-ன்னு பேசாதீங்க! ஷாஜஹானுக்கே வலிக்கும்.

கோடையில் வயிற்றுப்போக்கு அதிகம் வரக் கூடும். மோர் லாக்டோபாஸிலஸ் எனும் புரோபயாடிக்ஸ் நிறைந்துள்ள மருத்துவ பானம். கழிச்சலை வராது தடுக்கும் மருந்தும் கூட. அசீரணத்தில் வரும் வயிற்றுப் போக்கிற்கு ஓமம் வறுத்து செய்யும் கஷாயமோ அல்லது ஓம வாட்ட்ரோ நல்லது. நீர்த்துவமாக போகும் வயிற்றுப் போக்கை நிறுத்த, மாதுளை ஓடை பொடி செய்து கொடுங்கள். குழந்தைகளாக இருப்பின் கூடுதல் கவனம் தேவை. நீர்த்துவம் குறைய விடக் கூடாது. தண்ணீரில் உப்பு இனிப்பு கரைந்த கரைசல் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

கோடையில் வரும் வெயில் கொப்புளங்கள் எனும் வேனல் கட்டி, வேர்க்குருக்கள், வியர்வையில் வரும் பூஞ்சை காளான்கள் தோலை காயப்படுத்தும். தினசரி இரு முறை குழந்தைகளும் பெரியவரும் குளிப்பது நல்லது. நலுங்குமாவு தேய்த்து குளிப்பது, தோலை வனப்பாகவும் ஆக்கும். சித்தமருத்துவரிடம் கிடைக்கும் குங்கிலிய வெண்ணெய், வேனல் கட்டிக்கும், சீமை அகத்தி களிம்பு தோல் பூஞ்சைக்கும் நல்லது. வெயிலில் தோல் நிறம் மங்கி நிற்பதற்கு இயற்கை தந்த சன் ஸ்கிரீனர் சோற்றுக் கற்றாழை. அதனை நேரடியாகவோ அது கலந்த கிரீமையோ தடவுவது நல்லதுதான். கிரீம்கள் எனில் spf  அளவு குறைவாக உள்ள கிரீமை தேர்ந்தெடுங்கள். அதிகம் சன் ஸ்கிரீனர் தேய்ப்பது விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்து உள்போகாது ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் கான்சர் வரை வர வைக்கும் என்கிறனர் சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள்.

கோடையில் அடிக்கடி கோழிக்கறி சாப்பிடுவது; கொள்ளு ரசம் சாப்பிடுவது நல்லதல்ல. சூட்டைத் தரும். வாய்ப்புண் வரவைக்கும். மாதவிடாயை நடுவில் ஒருமுறை தலைகாட்ட வைத்துவிடும். வெயில் காலத்தில் நீர்க்காய்கறிகளை பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போல் செய்யவும். உடலைக் குளிர்ப்பித்து, கோடையில் நாம் இழக்கும் உப்புக்களையும் தருபவை பீர்க்கு, சுரை, புடலை, வெள்ளைப்பூசணீ போன்ற  நீர்க்காய்கறிகள்.

விடுமுறைக்கு போகும் போது கூலிங்கிளாஸ், தொப்பி, டைட் ஜீன்ஸ் இதெல்லாம் எடுத்து,  “நிச்சயம் அழகாய் தெரிவோம்!என்ற அசாத்திய துணிச்சலில் தயாராய் நாம் போவோம். அப்புறம் அதை போட்டோவில் குளோஸ் அப்பில் பார்க்கும் போது தான், ஒரே நகைச்சுவையாய் இருக்கும். ஆதலால் அந்த தேவையில்லாத அந்த மேக்கப் சாதனங்களுடன் தேவையான காய்ச்சல், வாந்தி-பேதிக்கு மருந்தும், மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டெனும் ஆபத்பாந்தவன் அட்டையையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

இந்த கோடை விடுமுறையில் மனசை லேசாக்குங்கள். கொன்றைப் பூவின் மஞ்சளை ரசியுங்கள்; எங்கோ சத்தமிடும் தூக்கனாங் குருவியின் இசையைக் கேளுங்கள். எத்தனைப் புண்படுத்தினாலும், இன்னும் இனிக்கும் மலையை பார்த்து மலையுங்கள். வலித்து, இரும்புச் சக்கரத்தை சுற்றி இனிப்பை பிழிந்து தரும் கரும்புச் சர்க்கரைக்காரனின் வறுமையை யோசியுங்கள். விசாலமாய்ப் பரவியுள்ள கடலை வாய்பிளந்து பார்த்து நிற்கையில் குளிர்ந்து முத்தமிட்டுச் செல்லும் கடலலை, இன்னும் சில கோடி ஆண்டுகள் என்னை விட்டுச் சொல்வாயோ எனும் மன்றாட்டை புரிந்து கொள்ளுங்கள். விடுமுறை நிச்சயம் உங்களுள் மாற்றம் தரும்; மகிழச்சியுடன்!

Saturday 7 April 2012

வெங்காயம் - உரிக்க உரிக்க... நிறைய நிறைய...


 
உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாமல் போய்விடும் அதன் அழகைப்பார்த்து, இழிவாக பிறரைப் பேச 
ஒரு வெங்காயமும் இல்ல,””போடா வெங்காயம்!”- என சொல்வதுண்டு. ஆனால் வெங்காயம் தரும் உடல் ஆரோக்கியம் மிக உயர்ந்தது. அரிசி போல் மிக பாரம்பரியமாக மனிதனின் உணவுப்பட்டியலில் நெடும் நாளைக்கு முன்னரே இடம்பெற்ற பொருள் வெங்காயம்.
மத்திய ஆசியாவில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று கருதப்படும் வெங்காயம் குறித்து நம்ம ஊர் சித்தர் அகத்தியரும், வட நாட்டு ஆயுர்வேதம் படைத்த சரகரும் ,மட்டும் பாடவில்லை. கிரேக்கம், அரபு, சீனம் லத்தீன் ஹீப்ரு மொழியில் எல்லாம் வெங்காயம் பெருவாரியாக புகழப்பட்டிருக்கிறதுபக்கத்து தேசமான பாகிஸ்தான் வெங்காயம் எங்க ஊர்ல பிறந்தது என்றும் சொல்லி வருகிறது


இயேசுநாதர் காலத்திலிருந்து நேற்று படைக்கப்பட்ட பீட்சா பர்கர் வரை வெங்காயம் உணவில் உண்டு. சில மீன் துண்டுகளும், வெள்ளரி, பூசணியும், வெங்காயமும் பூண்டும் கொண்ட உணவு”-என்ற விபரம் பைபிளில் சொல்லப்படுள்ளது வெங்காயத்தின் தொன்மையைப் பரைசாற்றும் விபரமாகும். உணவாய் மட்டுமல்ல, மருந்தாய், விருந்தாய் கிரேக்கத்தில் வெங்காயம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த காலத்து மம்மி..வெங்காயம் உரிக்க அழுவது நமக்கு தெரியும் அந்தகாலத்து கிரேக்க மம்மிகளின் (பிரமிடுகளில் இன்றும் உறங்கிக் கொண்டிருக்கும்) கண்களின் துளைகளில் வெங்காயம் பொதிக்கப்பட்டுள்ளது.

சரி! வெங்காயம் ஒரு சிறந்த உணவென்பதற்கு அதை உரிக்க ஆரம்பித்தவுடன் வரும் ஆன்ந்தக் கண்ணீரே சாட்சி. ஆனந்த கண்ணீரா..ம்ம்! உரிச்சுப்பாருங்க கஷ்டம் புரியும்! என தடாலடியாகக் கோபப்பட வேண்டாம்! வெங்காயத்தை உரித்தவுடன் அதிலிருந்த வரும் கந்தக அமிலம் காற்றில் கலந்து வந்து கண்ணீர் பையை உசுப்பிவிட கண்ணீர் வழிகிறது..அந்த கந்தக அமிலம்தான், நம் உடலில் கிருமிகள் தாக்கவண்ணம் பாதுகாக்கிறது.. அட! இப்ப சொல்லுங்க அது ஆனந்த கண்ணீர் தானே? வெங்காயம் வெறும் கிருமிநாசினி மட்டுமல்ல..அதையும் தாண்டி பெரிய தன்மையுடையது!
சிவந்த தோலுடைய வெங்காயத்தில் ஏராளமான பாலிஃபீனால் சத்து நிறைந்து உள்ள்து. அது என்ன பாலிஃபீனால்? தாவரங்கள் நமக்காகச் சேமித்துத் தரும் ஒருவகை மருத்துவ கூறுகள் அவை. ஒரு தாவரத்தில் இதன் இருப்பை வைத்து அதை உயர் மூலிகை என்ற பட்டமும் கூட  தரலாம்.

 வெங்காயம் ஒரு உணவுப்பொருள் மட்டுமல்ல..உயிர்காக்கும் உயர் மூலிகையும் கூட. சின்ன வெங்காயம் எனும் சாம்பார் வெங்காயம், பல்லாரிஎனும் பெரிய வெங்காயத்தைக் காட்டிலும் மருத்துவ குணத்தில் உயர்ந்தது.இந்த பாலிஃபீனால்கள், சிறிய வெங்காயத்தில் பல்லாரியைக் காட்டிலும் பல மடங்கு உள்ளது. இனிமேல் உணவைத் தாளிக்கும் போதோ, தயிர் பச்சடி செய்யும் போதோ, ஆனியன் ஊத்தப்பம் பண்ணும் போதோ சிறிய வெங்காயத்திற்கு முதலிடம் தாருங்கள்..அது உங்கள் ஆரோக்கியத்திற்கு முதலிடமளிக்கும்.


வெங்காயம் குளிர்ச்சியா? வெப்பமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு பதில் தெரிய, ஓரகடத்தில் அடுக்குமாடி வீடு ஒன்று கொடுக்கும் அளவிற்கு போட்டி நடத்தலாம்.. நிறைய சர்ச்சை இருந்தாலும், சித்த மருத்துவமோ..வெங்காயம் வெப்ப தன்மையை உடையது என்கிறது. அதே சமயத்தில் வாய்ப்புண், உடல் சூடு தணிக்க முதல் மருந்து என்றும் கூறுகிறது.
இரத்தக் கொதிப்பு  நோயை ஆங்கிலத்தில் silent killing disease என்பர். மன அழுத்தமும் இறுக்கமும் பெருகிவரும் இன்றைய துரித வாழ்வில் பலருக்கும் 30-களிலேயே இந்த இரத்தக் கொதிப்பு பிரச்சினை தலை விரிக்கிறது. அவர்கட்கெல்லாம் இந்த வெங்காயம் சிறந்த உணவு. அப்ப வெங்காயம் சாப்டுட்டு பி.பி. மாத்திரையை எல்லாம் ஒரம் கட்டிரலாமா? என அவசரப்படாதீர்கள்..வெங்காயம் இரத்தக் கொதிப்பு  நோயினருக்கான சிறந்த உணவு....மருந்தல்ல.

கருத்தரிக்க தாமதமாகும் பெண்கள் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய பொருள் வெங்காயம் விட்டமின் பி6-ம் ,விட்டமின் சி-யும் நிறைந்திருப்பதால் கருத்தரிக்க வேண்டிய காலத்தில் தேவைப்படும் ஹார்மோன்கள் சீருடன் இருக்க பெரிதும் உதவும். கூடவே உடல் எடை குறைப்பிலும் பங்களிப்பதால்,பாலி சிஸ்டிக் ஓவரி நோயில் குண்டான உடலுடனும், மாதவிடாய் சிர்கெட்டு இருக்கும் நிலையிலும் தொடர்ச்சியாக வெங்காயம் எடுத்துவர, மாதவிடாய் சீராகும் வாய்ப்பு உண்டு.
சித்த மருத்துவத்தில் பெண்களுக்கு மாதவிடாய் நோயில் பரிந்துரைக்கப்படும் பல மருந்துகளில் வெங்காயச்சாறு கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். 8% ஃபோலிக் அமிலம் இருப்பதால், கருத்தரிக்கும் சமயம் கருவின் உள்ளுறுப்புக்கள் சரியாக இடம் பெறவும் உதவிடும்.

பெண்ணிற்கு மட்டுமல்ல ஆணுக்கும் இந்த வெங்காயம் கருத்தரிப்பை வேகப்படுத்த பெரிதும் உதவும். அந்த காலத்திலேயே சுமேரியர்கள், கிரேக்கர்களுக்கெல்லாம் இந்த வெங்காயம் வயாகராவாக பயன்பட்டிருப்பதை வரலாறு கூறுகிறது.  நீரிழிவு நோயில், மற்றும் பிற காரணங்களால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருப்பின் வெங்காயம் உணவாக பெரிதும் பயன்படும்.
குயிர்சிடின்’- எனும் ஒரு ஃப்லேவனாய்டு (தாவர வேதிப்பொருள்) இந்த வெங்காயத்தில் ரொம்ப உண்டு. இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை கரைப்பதுடன், இரத்த நாளங்களில் வெடிப்பு இருப்பின் அதையும் சரி செய்து, மாரடைப்பு வராது தடுக்கவும் பயன்படும் என்கிரது இன்றைய அறிவியல். இதே குயிர்சிடின் உடலின் வெளிக் காயங்களில் காயத்தழும்பு(SCAR) ஏற்படாமல் இருக்கவும் உதவுவதாக நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

தினசரி உணவில் சிறிய வெங்காயம் தினசரி 8-10 குமிழ்கள் தினசரி சாப்பிடலாம். ஒரு நாளைக்குத் தேவையான மாங்கனீசு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் உப்புக்கள் எல்லாம் இந்த வெங்காயத்தில் இருந்தே 10% வரை கிடைத்து விடும். வெங்காயத்தில் அதிக அளவில் தண்ணீரும் இருப்பதால் தான் உடலுக்குத் தேவையான இந்த உப்புச்சத்து அந்த நீரில் கரைந்து 
இருக்கிறது.

இனி யாரேனும் சுத்த வெங்காயம் அவர்-என்றால், தலை கவிழ வேண்டாம்..மாற்றாய் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள். வெங்காயம் உடலாரோக்கியத்தை தூக்கி நிறுத்துவது போல!

காய்ச்சல்.

ஒன்பது பத்து வயதிருக்கலாம்..ஆனால் இன்னும் அந்த காய்ச்சலின் கதகதப்பு மறக்கவில்லை.”எக்கா! ரொம்ப சுடுதுக்கா..பேசாம நவனீதன் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடலாம் என லோகு மாமா, என் அம்மாவிடம் சொன்னதும், “இன்னும் பத்து நிமிசத்தில கசாயம் வைக்கிறேன், ரண்டு வேளை பாத்திட்டு அப்புறம் குறையலேன்னா டாக்டர் வீட்டுக்குப் போகலாம்”, என பாட்டி சொல்லிக் கொண்டே வீட்டு முற்றத்தில் இருந்த கருப்புத் துளசியை கை நிறைய பறித்து வைத்துக் கொண்டு.,ஏல லோகு! தோட்டத்தில போய், ஒரு கைப்பிடி கப்பூர வல்லி, கொஞ்சம் நிலவேம்பு அரிஞ்சிட்டு வா” என சொல்லிய குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.
சொன்னபடி பத்து நிமிஷத்தில் அந்த அடுப்பங்கரை, அவசர சிகிச்சை தரும் மருத்துவமனையாகும். அதுவரை எண்ணைய்ப் பிசிக்குடன் இருந்த அஞ்சரைப்பெட்டியின் முகம் திடீர் முதலுதவிப் பெட்டியாக மாற மடமடவென, மிளகு, சுக்கு, ஓமம் என ஒவ்வொரு பொருளாய் வர, செம்புப் பாத்திரத்தில், கசாயம் கொதிக்கத் துவங்கும். உள்ளிருந்து வரும் மணம் மானாவெளியில் உட்கார்ந்திருக்கும் என் நாசியில் ஏற ஏற உடல் வலி குறையத் துவங்கும். கசப்பான அந்தக் கசாயத்தைத் தன் கண்டாங்கி சேலைத் தலைப்பில் இறுகப் பிடித்து எடுத்து வந்து..”மடமடன்னு குடிக்கணும் சொல்லிட்டேன்’ அப்பத்தான் கடைசி வாய்க்குக் கருப்பட்டி தருவேன்,” என்ற பாட்டியின் அதட்டல் அன்பில், வேகமாய்க் கசாயம் குடித்து முடிக்கையில், காது பக்க முடி நனைந்து, வியர்வைத் துளிகள் முகமெங்கும் வர வர காய்ச்சல் விடைபெற்றிருக்கும்..மூணு, நாலு நாளில் சளி எல்லாம் வெளியேற, ”கருப்பட்டி தனியா தரமாட்டீங்களா பாட்டி?” என்ற என் வினவலுடன்..காய்ச்சல் காணாமல் போகும்.
”என் பையன் ரொம்ப கெட்டி சார்.! லேசா ஃபீவர் வரணும், அவனே போய் ’டோலோ’ வாங்கிப் போட்டிருவான்.. ’ஆண்டி பயாடிக்’ கூட அவனுக்கு அத்துப்படி..” என்ற அவசரகால அம்மா ஒருவர் என்னிடம் மருத்துவமனையில் சொன்னதைப் பார்க்கும் போது, எங்கே போய்விட்டாள் என் பாட்டி? எங்கே போகிறார்கள் இவர்கள்?” என என் மனம் ஏனோ தேடும்.
காய்ச்சல்- எந்த ஒரு இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும் துன்பம் காய்ச்சல். ‘எனக்கு காய்ச்சலே வந்ததில்லை’, என எவரும் சொல்ல முடியாது. ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனி நோய் இல்லை. வேறு ஏதெனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது குறிகுணம் தான் காய்ச்சல். எப்படி இதனை எதிர் கொள்வது? உடனே மருத்துவரை நோக்கி ஒடணுமா? அலட்சியமாக இருக்கலாமா?

காய்ச்சல் பற்றிய அடிப்படை அறிவு,, ”சாமுத்ரிகா பட்டு” மாதிரி, ”நேச்சுரல் வண்ணப் பட்டு” மாதிரி, ”பி.ஃப்.கடனுக்கான வட்டிக் கணக்கு” மாதிரி ”கண்டிஷனர் கலந்த ஷாம்பு” பற்றி எல்லாம் தெரிந்திருக்கிற மாதிரி, கண்டிப்பாய் ஒவ்வொரு அம்மாக்கும், அப்பாக்கும் தெரிந்திருக்கணும். .தெரிஞ்சுக்குவோமா?
நம் உடலுக்குள் ஏதேனும் வைரசோ, பாக்டிரீயாவோ திடீர் அழையா விருந்தாளியாக உள் நுழைந்தால், ஏதேனும் உடலின் வெளிப்புறமோ, உள்புறமோ காயங்கள் ஏற்பட்டிருந்தால், வேறு ஏதும் நோய் நிலையிலோ, நம் உடல் தன்னை காத்துக் கொள்ளவும், காயத்தை ஆற்றவும், வைரஸ், பாக்டீரியாவை எதிர்க்கவும் நடத்தும் போரில் வரும் உடல் வெப்ப உயர்வே காய்ச்சல். நல்ல ஆரோக்கியமான உடலில் இந்தக் காய்ச்சல் பெரும்பாலும் ஒன்றும் செய்வதில்லை. ஓரிரு நாள் சுரம் காய்ந்து ஓய்வதுடன் வேறேதும் நிகழ்வதில்லை. ’லங்கணம் பரம் ஒவுஷதம்’, என்று ஒரு மருத்துவ மொழி உண்டு. அதன் பொருள், ’காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’, என்பது தான். இப்போதைய உடல் வலுவுக்கு பட்டினி இருத்தல் நல்லது அல்ல. எளிய, விரைவில் செரிக்கக் கூடிய உணவு (இட்டிலி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி….போன்ற) மட்டுமே குறைவாக எடுப்பது சிறந்தது. நிறைய வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம். நிலவேம்புக் கசாயம் மட்டும் மூன்று நாள் தவறாமல் எடுத்துக் கொள்ளுதல் போதுமானது.
சளியுடன் கூடிய காய்ச்சல் எனில் காலை மாலை இரண்டு வேளை ஆடாதொடைக் அல்லது தூதுவேளை கசாயமும் குடிப்பது அவசியம். ’அதுக்கெல்லாம்..கொல்லிமலைக்குப் போகணுமோ என ஆயிரத்தில் ஒருவனாக’ கற்பனை எல்லாம் செய்ய வேணாம்..உங்கள் அடுக்குமாடி வீட்டு அறையில் கூட கொஞ்சம் வெளிச்சம், தண்ணீர், கூடவே கொஞ்சம் அக்கறையும் ஊற்றி இம்மூலிகையினை அழகாய் வளர்க்கலாம். ”நேரமில்லயே!” என வழக்கமான புலம்பல் வேண்டாம். கிளினிக் வாசலில் காத்து நிற்கும் நேரத்தை விட இதற்கு மெனக்கிடுவது குறைவாகத் தான் இருக்கும்.
சிறு குழந்தைக்கு வந்த சுரம் எனில், துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய் தூள், கசாயமாக்கி 30-60 மிலி இரண்டு வேளை 4 நாட்கள் கொடுக்கலாம்.அசீரணத்தினைத் தொடர்ந்து வந்த சுரம் எனில், சீரகக் கசாயம் இரு வேளை கொடுங்கள். மலம் சரியாக பிரியவில்லை எனில் ஒருமுறை பேதியாகும் படி ஆமணக்கு எண்ணெயோ, அருகாமையில் உள்ள உங்கள் குடும்ப மருத்துவர் தரும் பேதிமருந்தோ எடுப்பது நல்லது.
வைரஸ் காய்ச்சல் பெரிய தொந்தரவு பெரும்பாலும் தருவதில்லை என்ற பரவலான கருத்து பொய்த்து வருகிறது. புவி வெப்பமடைதலாலோ, இந்த மண்ணையும் நம் சூழலையும் நாம் கண்டபடி நம் வசதிக்கென கெடுத்து வந்ததாலோ, கோபம் கொண்ட நட்பு வைரஸ்கள் எல்லாம் நம்மோடு ’டூ’ விடத் துவங்கிவிட்டன. அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் தமிழகத்தைப் பாடாய்ப்படுத்தி, எல்லா மருத்துவருக்கும் ’பெப்பே’ காட்டி வரும் மாறுதலான சிக்கன் குனியா.



எங்கோ மேற்கு ஆப்பிரிக்காவில் லேசாய் 1950 களில் தலைகாட்டி, 40ஆண்டுகள் ஆளரவமில்லாமல் இருந்த ஆல்ஃபாவைரஸ் நம்மூர் கூவத்துச் செழிப்பில், கொழித்துப்போன ஏடஸ் ஏஜிஸெகிப்டிகஸ் கொசுவில் குடித்தனம் வைத்து 2006 டிசம்பர் முதல் நம்மைச் சுற்றி அதிகம் வலம் வரத் துவங்கிவிட்டன. விளைவு..காய்ச்சல், அது போன பின்பும் மூட்டுவலி, காலை எழுந்தவுடன் கை, கால் மூட்டுகள் எல்லாம் ஃபெவிக்கால் போட்டு இறுகியது போன்ற உண்ர்வும் கூடவே தாங்க முடியாத வலியும் மாதக் கணக்கில் தொடர்கிறது. மிகவும் கொடுமையான விஷயம், இந்த சாதாரண சுரம், தமிழகத்தில் சில சாமானிய மக்களை மரணமும் அடையச் செய்திருப்பது தான்.
சிக்கன் குனியாவைப் பரப்புவது அந்த ஏடஸ் வகைக் கொசு தான். ஒருவரை அது கடித்துவிட்டு அருகாமையில் உள்ளவரைக் கடித்தால் வைரஸ் அவரிடம் இருந்து இவருக்குப் பரவி விடும். கொசுவை கூடிய வரை உள் நுழையாது கவனமாக வீட்டை வையுங்கள். நல்ல தண்ணீரை சேமித்து வைப்பதில் கொசு பரவ வாய்ப்பு அதிகம். இதனைத் தவிர்த்துவிடுங்கள். வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி (பெரிய நெல்லிக்காயில்), மிளகு ரசம், கண்டிப்பாகச் செய்யுங்கள். இன்னும் ஓரிரு மாதத்தில் பூக்கத் துவங்கும், வேப்பமரத்தின் பூவினை வைத்து வேப்பம்பூ ரசம் வையுங்கள். உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.அருகாமையில் இந்தக் காய்ச்சல் இருந்தால், சித்த மருத்துவரிடம் கிடைக்கும் நிலவேம்புக் குடிநீரை வாங்கி, வீட்டில் உள்ள அனைவரும் தினசரி காலை மாலை வெறும் வயிற்றில் 60-90 மிலி அளவு கசாயம் வைத்து ஒரு வாரம் சாப்பிடுங்கள்.
காய்ச்சலின் தன்மை மாலை மட்டும் உயர்ந்தாலோ, சளியுடன் இருந்தாலோ அது பிரைமரி காம்பிளக்ஸ் எனும் காசமாக இருக்கலாம். காய்ச்சலுடன் பல்லீறுகளில் இரத்தம் கசிவது, கெண்டைக்கால் மட்டும் வலிப்பது இருந்தாலோ டெங்கு அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் எனும் எலிச்சுரமாகவோ இருக்கலாம். வலப்பக்க வயிறு வலி வீக்கத்துடன் கண்கள் மஞ்சளித்து இருப்பதும், சிறுநீர் மஞ்சளாகப் போவதும் இருப்பின் காமாலையாக இருக்கலாம். கஞ்சி போல் பேதியாவதுடன், தினசரி படிப்படியாக காய்ச்சலிருப்பின் டைபாய்டாக இருக்கலாம். இது போன்ற சூழலில் உங்கள் குடும்ப மருத்துவரின் நோய்க் கணிப்பும் முறையான சிகிச்சையும் மிக அவசியம்.
காய்ச்சலில் சில சிறு குழந்தைகட்கு அதிக சுரம் தாங்காமல் வலிப்பு வரக் கூடும். அதைத் தவிர்க்க, சுரம் 100-102 வரும் வரை பார்த்துக் கொண்டிராமல், தகுந்த சிகிச்சையுடன், நெற்றியில் வெள்ளைத்துணியை நனைத்து குளிர்பிப்பது அவசியம். அவ்வித ஃபெப்ரைல் கன்வல்ஷன்ஸ் எனும் வலிப்பு குறித்து வாழ் நாள் முழுதும் தொடர்ந்திடுமோ என்று அச்சமடையத் தேவையில்லை. உடல் நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்திட்டால் போதும்.
காய்ச்சலில் இவ்வளவா? என்கிறீர்களா? சித்த மருத்துவம் 62 வகை சுரம் பற்றி பேசுகிறது. அத்தனையும் அறிந்திருப்பது இயலாது. ஆனால் ஒவ்வொரு வீட்டுப் பெரியவரும் இதன் அடிப்படை சில உண்மைகளையாவது அறிந்திருப்பது மிகவும் அவசியமல்லவா?

தண்ணீர்... தண்ணீர்!


”நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். இந்த உலகின் அத்தனை சீவராசிகளுக்கும் அடிப்படை வாழ்வாதாரம் நீர். நீர் தான் முதல் தலையாய உணவும் கூட. உலகின் 70% இடத்தை ஆக்ரமித்திருக்கும் தண்ணீரை தவிர்த்து எந்த ஒரு செயல்பாட்டையும் கற்பனை செய்வது கூட கடினம். நம் உடலின் நலவாழ்வுக்கு மிக அடிப்படை தேவையும் சரியான அளவிலான தண்ணீர்தான். சராசரியாக 3-4 லிட்டர் தண்ணீர் ஒரு நல்ல உடலுக்கு அவசியம் தேவை. நம் உடல் எடை, உருவ அமைப்பு, தட்பவெப்பம், பணியிடம் பொறுத்து இந்த அளவு கொஞ்சம் மாறாலாம். நம் உடலின் நீரளவு 2% மேல் குறைய துவங்கினாலே மயக்கம் தலை சுற்றல் என பாதிப்பைத் தரும்.ஆதலால், அப்புறமாய் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் என தாக உணர்வை தவிர்ப்பது, “அட! நான் எங்க இருக்கிறேன்? எல்லாரும் ஏன் என்னைச் சுற்றி இருக்கிறார்கள்? முகத்தில ஏன் தண்ணீர்?” என வசனம் பேசும் காட்சிக்கு
நம்மை கொண்டுவந்து விடக் கூடும்.

’எந்த தண்ணீர் உடலுக்கு நல்லது? என்ற அக்கறையில் துவங்கி, ’நான் பாட்டில்-வாட்டர்ல தான் முகம் கழுவி வாய் கொப்பளிப்பேன். வில்லேஜ் தண்ணீர் ஒத்துக்குமா? என்ற அதிகப்பிரசங்கி முன்ஜாக்கிரதைகள் வரை தண்ணீர் வீட்டிலும் நாட்டிலும் அரசியலுக்கும் அடித்தளமாய் இருப்பதறிவோம். விவசாயம் பெருக பெருக நல்ல தண்ணீருக்கான தேவையும் கூடியதில், தற்போது கிட்டத்தட்ட உலகில் உள்ள நல்ல தண்ணீரில் 70% அளவு விவசாயத்திற்கு மட்டுமே தேவைப்படுகிறதாம். பசுஞ்சாணியும் வேப்பம் புண்ணாக்கும் கோமேயமும் ஊற்றி விவசாயம் செய்த போது தேவைப்பட்டதைக் காட்டிலும் இந்த ’நட்டு போல்ட்டு, வெடிகுண்டு இரசாயனம், விஷத் தெளிப்பான்கள்’ போட்டு செய்யப்படும் நவீன விவசாயத்தில் இந்த தண்ணீரின் தேவை பல மடங்கு பெருகியது. ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்.. மலையில் வாழ்வோரை எல்லாம் விரட்டி பெரிய அணைகட்டுவோம்..” என்ற மனிதநேயம் தொலைத்த வசனங்களுடன் அரசியல் வக்கிரங்கள் கூடவும் வகை செய்தது.

தண்ணீர் நம் தலையாய உணவு. நாம் சாப்பிடும் உணவின் சாரத்தை கரைத்து அதிலுள்ள உப்பு, கனிமங்களில், தாவர சத்துக்கள், பலவற்றைக் கரைத்து குடலுறிஞ்சிகளால் உட்கிரகிக்கப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றம் பிரச்சினையின்றி சுமூகமாக நடைபெற சரியான அளவு தண்ணீர் அவசியம் தேவை. நாம் குடிக்கின்ற தண்ணீரிலுமே குறிப்பிட்ட அளவு உப்புக்களும் கனிமங்களும் உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. கல்லிடைக்குறிச்சி தாமிரபரணித் தண்ணீரும், கோவையின் சிறுவாணித் தண்ணீரும் சுவைபட இருப்பது அத்தண்ணீர் கடந்துவரும் பாதியில் கரைத்துவரும் கனிமங்களால் தான். சாக்கடையையும், சாயத்தையும்..கண்ட கண்ட இராசயனங்களையும் ஆற்றிலும் மண்ணிலும் இஷ்டத்திற்கு கரைத்து விடும் களவாணித்தனம் பெருகியதில் தண்ணீரின் சுவை மட்டும் மாறவில்லை. தண்ணீரினால் வரும் நோயும் பெருகியது. சுத்தமில்லாத தண்ணீரினால், வாந்தி பேதி வந்த காலம் போய், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைப்பேறும், புற்று நோயும் கூட வர ஆரம்பித்திருப்பதுதான் வேதனை.

நல்ல தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது நல்ல வரன் பார்த்து கல்யாணம் பண்ணுவதைக் காட்டிலும் ரொம்ப முக்கியம். தண்ணீர் குடிக்க தகுதயானதா என்பதை அறிய Total disoved salts(TDS) அளவு எவ்வளவு என்று சொவதைக் கேள்விப்படிருக்கலாம். கிட்ட்த்தட்ட 100-120 TDS அளவு இருந்தால் அது சுவைபட குடிக்கத்தகுதியானதாக இருக்கும். TDS அளவு குறைய குறைய சுத்தமாய் சுவையே இல்லாத தண்ணீராகிவிடும் (அதில் எந்த உப்பும் இல்லை என்பதால்). TDS அளவு ரொம்ப கூட கூட உடலுக்கு கேடு விளைவிக்கும் தண்ணீராகிவிடும். தொழிற்சாலை கழிவுகளால், இந்த தண்ணீரின் TDS அளவு மாறுபடுவது தான் உடலுக்கு கேட்டை தருகிறது. அதல்லாம் நாங்க ”சுடவச்சு ஆற வச்சு” குடிக்க்றோமுல்ல..” என்பவருக்கு ஒரு சேதி! சுட வச்சு ஆறவைத்தால், பாக்டீரியா வைரஸ் போகும்; வாந்தி பேதி வ்ராது! ஆனால் இந்த உப்பு-கனிமக் கூட்டணி அதிகமிருந்தால் இந்த சுட ஆறவைக்கும் சாங்கியங்கள் கறிக்குதவாது! அதனால் மினரல் வாட்டரோ, ’ரிவர்ஸ் ஆச்மாஸிஸ்’ செய்த குடி தண்ணீரோ வாங்கி உபயோகிப்பதோடு நின்று விடாமல், உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீரை நாசப்படுத்துவதைக் கண்டிக்கத் தவறவும் கூடாது.

காலை எழுந்ததும் பல்துலக்கிவிட்டு 4-5 குவளை குளிர்ந்த (பிரிட்ஜில் வைத்ததல்ல..) நீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அதேபோல் உணவு சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் 10-15 நிமிடங்கள் தண்ணீர் சாப்பிடுவது நல்லதல்ல என்ற கருத்தும் பெருகி வருகிறது. அதற்காக விக்கல் வரும்போதும் ”இன்னும் 10 மினிட்ஸ் பொறுப்போம்”, என இருப்பது ஐசியு-க்கு அழைத்துப் போய்விடும். ஒவ்வொரு கவளத்திற்கும் நடுவில் தண்ணீரை ’சிப்’ செய்து சாப்பிடுவது நல்லதல்ல. ‘இடையில் குடியாதே; கடையில் மறவாதே’, என்ற வழக்குமொழி தண்ணீரைச் சாப்பிடுகையில் எப்போது அருந்த வேண்டும் என்பதற்காக சொன்னது தான். சாப்பிடும் போது இடைஇடையே தண்ணிர் அதிகமருந்தினால் உணவுக்கூழை உடலில் செரிக்க வைக்கும் நொதிகள் நீர்த்துப்போய், செரிமனம் கெடும். சில நேரங்களில் வேகமாய் சர்க்கரை உடலில் ஏறவும் செய்து விடும்.

ஆனால் உணவில் நீர்சத்துள்ள தக்காளி, சுரைக்காய், வெள்ளைப்பூசணி, வெள்ளரி, பீர்க்கு, புடலை, போன்ற காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். குறிப்பாய் அதிகம் வியர்க்கும் நம் மாநிலத்தில் இந்த தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கள் நிறைய தேவை. கிரணிப்பழம், தர்ப்பூசணிப்பழம், ஆரஞ்சு, போன்ற பழங்களும் அப்படித்தான். பழங்களில் நீரும் நாரும் பல்வேறு சத்துக்களும் அதிகமிருப்பதால் தான் அதற்கு உணவில் முதலிடம் தர அதிகம் வலியுறுத்தப்படுகிறது.

நல்ல சுத்தமான சரியான ’டிடிஸ்’ அளவுள்ள தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து பாத்திரங்களில் சேமித்து அருந்துவது நல்லது. பிளஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை சேமித்து வைத்து அருந்துவது நல்லதல்ல. சில வகை பிளாஸ்டிக்குகள் அதில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில் செய்யும் போது பயன்படுத்தப்படும் ரசாயனத்தை மிக நுண்ணிய அளவு அதில் கலக்கின்றன எனும் செய்திகள் பல வருகின்றன. அவை உடலுக்கு கேடு என்றும் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன. ஆதலால் முடிந்த வரை பிளாஸ்டிக் பாட்டிலைத் தவிர்ப்பதும் கூட நல்லது தான்.

தினசரி காலையில் நீரருந்துவது போல, இரவில் படுக்கும் போது வெதுவதுப்பான நீர் 2-3 குவளை அருந்துவதும் மிக மிக நல்லது. இரத்தக் கொதிப்பு, மதுமேகம், மலச்சிக்கல், அசீரணமுடன் கூடிய வயிற்றுப்புண் எல்லாம் நன்றாகக் கட்டுப்பட இந்த தண்ணீரின் மீதான அக்கறை உதவிடும்.

மொத்தத்தில் தண்ணீர் உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை. சுத்தமான பாதுகப்பான தண்ணீரை தேடி, அதை சரியான அளவில் தினசரி அருந்துவதும், நம் வருங்கால சந்ததியரின் நல்வாழ்விற்காக, நம் சுற்றுப்புறத்து தண்ணீரை கேடடையச் செய்யாமல் இருப்பதும் நம் கடமை

மஞ்சள் - உணவாய், மருந்தாய்!


வண்ணங்களில் சில மனதை லேசாக்கும். சில வலிமையாக்கும். சில களிப்பூட்டும். சில காயப்படுத்தும். சில மருந்தாகும்! மருந்தாகும் ஒரு நிறம் மஞ்சள். மஞ்சள் நிறமும் அதைத் தந்த மஞ்சள் கிழங்கும் நெடுங்காலமாகவே, ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக நம்மை காத்து வரும் ஒரு அற்புத மருந்து. நம் பண்பாடோ அதை ஒரு துளி உணவாக்கி, அன்றாடம் சாப்பிட வைத்தது; கரைத்துத் தெளிக்க திருவிழா தந்தது; பூசி வணங்க தெய்வ வழிபாட்டை தந்தது. மொத்ததில், மஞ்சள் உணவாய், உணர்வாய், மருந்தாய் நம் வாழ்வியலில் அங்கம் வகிக்கும் நம் மண் தந்த மகத்துவம்.

தினசரி உணவில் எந்த அளவு அக்கறைப்படுகிறோமோ அந்த அளவிற்கு நோய் குறித்த கவலையில் இருந்து விலகி நிற்கலாம் என்பது நம் முன்னோரின் தெளிவு. சிற்றுண்டியோ பேருண்டியோ, சிக்கனமான அன்றாட உணவோ ஆடம்பரமான பெரு விருந்தோ அத்தனையிலும் அக்கறையுடன் இருப்பது அவசியம். அப்படியான அக்கறாயில் தான் மஞ்சள் நம் அன்றாட உணவில் பெரும்பாலும் இடம்பெறுகிறது.

மஞ்சள்கிழங்கின் தூள் விரலிமஞ்சள் (ஆலப்புழா வகை), குண்டுமஞ்சள் (ஈரோடு வகை) எனும் இரண்டு வகையில் இருந்தும்தான் பெரும்பாலும் பெறப்படுகிறது. மகராஷ்ட்ராவின் ’சங்லி’ வகை ’ராஜபோரி’ வகை, ஆந்திராவின் ’நிஸாமபாத்’ வகை என இந்தியாவில் பல மஞ்சள் வகைகள் உண்டு. இருந்தாலும், ஈரோடு மஞ்சளுக்கும் ஆலப்புழா மஞ்சளுக்கும் தான் உலக பிரசத்தி எப்போதும் உண்டு! விரலி மஞ்சளில் அதிகம் ’குர்குமின்’ சத்து இருப்பதாக அறியப்படுகிறது.



மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்களுண்டு. அதில் மிகச் சிறப்பானது கிருமி நாசினி. வயிற்றுள் உள்ள கிருமி புழுக்களுக்கு மஞ்சள் தூள் சிறந்த மருந்து. சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை வேப்பங்கொழுந்துடன் வாரம் ஒரு முறை அரைத்து கொடுத்தால் ’எல்லை தண்டிய வன்முறை’யில் ஈடுபடும், குடலினுள் ஓண்ட வந்த பாரசைட்டுக்குள் பல சத்தமில்லாமல் இடத்தை காலி பண்ணும்.சிறு குழந்தைகட்கு வரும் சளி இருமலுக்கு மஞ்சள் தூள் கலந்த சுடுபால் ஒரு கைகண்ட கை மருந்து!

மஞ்சள் அந்தகாலத்து ’டி.டி. இஞ்சக்‌ஷன்’ போன்றது என்பது பலருக்கும் தெரியாது. காயம் பட்டவுடன் முதலில் புண்ணை நன்கு கழுவி அந்த புண் மீது மஞ்சள் தூள் கலவையை போட புண் ஆறும். சுற்றியுள்ள வீக்கம் தணியும். வலி குறையும். சாதாரணமாக, காயம் நீங்க, வலி குறைய, வீக்கம் வடிய என்ற மூன்று மருந்துகள் தேவைப்படும் இடத்தில் மஞ்சள் ஒன்றே முன்ற்தன் பணியையும் செய்யும்! கூடுதலாய் டெடனஸ் கிருமி தாக்காதிருக்கவும் மஞ்சள் காப்பு பயன்படுகிறதாம்.

மஞ்சள் சீரணத்திற்கு உதவும் ஒரு மருந்தும் கூட. தினசரி உணவில் துளித் துளியாய் சேர்ப்பதன் மூலம் எண்ணெயில் பொரித்த, உணவுகளைச் சீரணிப்பதற்கு பேருதவி செய்யும். மஞ்சள் மீதான இன்றைய ஆராய்ச்சிகளில், குடலை வாட்டும் ”அல்சரேட்டிவ் கோலைட்டிஸ்” எனும் பெருங்குடலைப் பற்றிய நோயில் மஞ்சளின் மருத்துவ மகிமை உணரப்பட்டுள்ளது.

நாம் அன்றாடம் மசாலவில் சேர்க்கும் மிளகாய் வற்றல் அத்தனை நல்லதல்ல. அதிலுள்ள சில பொருடகள் அதிக அளவில் சேர்க்கப்படும் போது குடலில் புற்று வரும் வாய்ப்புண்டு. ஆனால் மிளகாய் வற்றல் சேரும் இடத்திலெல்லாம் மஞ்சளும் பெரும்பாலும் சேருவதால் நமக்கு அந்த அச்சம் தேவையில்லை. மஞ்சளின் புற்று நோய் தடுக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலை சேட்டை செய்யாமல் பார்த்துக் கொள்ளும்!

இன்றைக்கு நம்மை வாட்டும் நோய்களில் அதிகம் வளர்ந்து வரும் நோய்க் கூட்டம் புற்று நோய் கூட்டம். இன்றளவில் பல புற்று நோய்க்கு சற்று அதிகமாகிவிட்ட பின் கண்டுபிடித்தால், பெரிய அளவில் பயன் தரும் சிகிச்சை இல்லாத சூழலில் மஞ்சளின் பயன் மிக மிக முக்கியமானது. இந்தியாவில் பல புற்று வகைகள் அதிகமானாலும், தோல், பெருங்குடல் புற்று கொஞ்சம் குறைவாக இருப்பது மஞ்சளின் அன்றாடப் பயன்பாட்டினால் தான் என்கிறது மருத்துவ அறிவியல்!

மஞ்சளில் உள்ள ’குர்குமின்’ சத்தில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், அது வராது தடுப்பதிலும் பங்களிக்கின்றன என்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. வழக்கமாக பாரம்பரிய மருந்து என்றாலே ,அது குத்தம் இது குத்தம், என்று உள்குத்து வைக்கும் உலகின் “பெரிய அண்ணன்” ஆன, அமெரிக்காவின் FDA கூட மஞ்சள்-ஐ பயமின்றிப் பயன்படுத்தலாம் என்கிறது. அதே சமயத்தில் வேகவேகமாக ”மஞ்சளின் நல் குணங்களை எல்லாம் நான் தான் கண்டுபிடித்தேன் எனக்குத்தான் காப்புரிமை..இனி யாராவது மஞ்சளரைத்து பாத்ரூமில் குளித்தாலோ, மாங்காடு கோயிலில் தெளித்தாலோ எங்க அக்கவுண்டில் கப்பம்(காப்புரிமை) கட்ட வேண்டும்,” எனச் சொல்ல, கொஞ்சம் மெதுவாக பொங்கி எழுந்தது இந்திய அரசாங்கம். ”டேய்! இது எங்க பாட்டன் சொத்து” என நம்மாழ்வார், வந்தனா சிவா போன்ற சூழலியலாளர்களும் சேர்ந்து சண்டையிட்டதில் மஞ்சள் களவாடப்படாமல் காப்பாற்றப்பட்டது.

மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய்(alzeimers disease), கீமோதெரபி தரும் போது ஏற்படும் பக்க விளைவுகள், புராஸ்டேட் கோள வீக்கம் புற்றாக மாறுவது-என்ற நிலைகளில் எல்லாம், நோயைக் குறைக்க அல்லது தடுக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் பித்தப்பை கல் (Gall bladder stone) நோயாளிகள், மஞ்சள் அதிகம் எடுக்க வேண்டாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. 

அழகு கூட்டும் பணியில் மஞ்சளின் பங்கு அன்றே அதிகம். மார்கோபோலோ முதல், அக்பர் வரை மஞ்சள் இந்தியாவில் ஆரோக்கியமான அழகைத்தரும் பொருளாக இருந்ததை வரலாற்றில் பதிவு செய்துள்ளனர். சிறுவயது முதலே பெண் குழந்தைகள் அடிக்கடி மஞ்சள் தேய்த்து குளிப்பது தாடைமுடி, மீசை வளராமல் தடுக்கும்.

ஒரு தடுப்பு மருந்தாய் ஒரு வாசனையூட்டியாய், ஒரு வலி மருந்தாய், ஒரு இணை மருந்தாய் என மஞ்சளின் அவதாரம் பல. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அன்றாடம் உணவில் மறவாமல் சேர்த்து மகிழ வேண்டியது மட்டுமே!