Sunday 12 February 2012

பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து-பூவுலகின் நண்பர்கள் மற்றும் குக்கூ

பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?

நமது குழந்தையின் எதிர்காலம் முக்கியமில்லையா?



கையில் வைத்து பட்டாசை தூக்கி எறிந்தபோது மகேஷின் கையிலேயே அது வெடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. பட்டாசு மருந்துக்கு அருகே முகத்தை வைத்துக்கொண்டு பற்ற வைத்தபோது சுரேஷின் முகத்தோல் உறிந்துவிட்டது. கீதாவுக்கு ஏற்கெனவே ஆஸ்துமாவும் சுவாசப் பிரச்சினையும் இருந்தன. தீபாவளி நேரத்தில் அது மோசமாகிவிட்டது. 
மற்றொருபுறம்...

"டமார்" என்ற மிகப் பெரிய ஓசையோடு வெடிச்சப்தம் கேட்டது. எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தபோது, அந்தக் கட்டடமே சுக்குநூறாகச் சிதறிக் கிடந்தது. கூலிக்கு பட்டாசு செய்து கொடுக்கும் குடும்பங்களில் அதுவும் ஒன்று. நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இறந்துகிடந்தார்கள். "பட்டாசு தயாரித்தபோது விபத்து, இரண்டு பேர் சாவு" என்று அடுத்த நாள் நாளிதழில் செய்தி வந்தது. இதுபோன்ற செய்தியை, ஆண்டுக்கு 20 - 30 முறையாவது பார்க்க முடிகிறது.

சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மாரி, அவளது கைகளில் உள்ள கந்தக மருந்தை எவ்வளவு தேய்த்தாலும் போவதில்லை. அவள் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கவில்லை. ஏனென்றால், இப்பொழுது பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் ஈடுபடக் கூடாது என்று நெருக்கடி வந்துவிட்டது. அதனால் பட்டாசு தயாரிப்பதற்கான பொருள்களை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். வீட்டிலேயே பட்டாசு தயாரித்து கொடுத்தால் போதும், கூலி கிடைத்துவிடும்.

மாரியின் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த தங்கராசுவுக்கு நரம்புக் கோளாறு. ஏதோ கெமிக்கல் அவரது உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று தற்போது அதிகம் சேர்ந்துவிட்டதால்தான் இந்தப் பிரச்சினை என்கிறார் மருத்துவர். இனிமேல் அவரால் பட்டாசோ, மத்தாப்போ செய்ய முடியாது. தினசரி ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

தீபாவளி அன்று நாமும் நமது குழந்தைகளும் மகிழ்ச்சியாக வெடித்துத் தள்ளும் பட்டாசுகளைத் தயாரிக்கும்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சிறிய உதாரணம்தான் மேலே உள்ள சம்பவங்கள்.

தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாணவேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன. தீபாவளி அன்றைக்கு காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படி சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்த புகைமூட்டம் எப்படி உங்களை பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்த புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளை தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:
செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்
காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு
காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்
மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்
மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு
சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம்
துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்
நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம்
நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்
உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.

காதுகள் ஜாக்கிரதை

மேற்கண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.
ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்
இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடியபோது, "இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை" என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள். குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை. 

ஆனால் 100 - 150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை. 

தீபாவளி என்பது வயிற்றுக்கு பாதகமில்லாத இனிப்புகள், விளக்குகள் வைத்து கொண்டாடுவதுதான். ஒரு சில நிமிடங்களில் கருகிவிடும் பட்டாசுகளுக்காக காசை கரியாக்காமல் குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணவண்ணப் புத்தகங்கள், அறிவூட்டும் புத்தகங்களை வாங்கித் தரலாம். 
மேற்கண்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் நன்றாக சிந்தித்துப் பார்ப்போம், பிறகு நமது குழந்தைகளுக்கும் இதைக் கூறுவோம். 
இந்தச் செய்தியை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ், அலுவலக - குடியிருப்பு நோட்டீஸ் போர்டு உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பரப்புவோம்.

பட்டாசுகளை தவிர்ப்பதற்கான கூடுதல் செயல்பாடுகள்:
- பள்ளி காலை வணக்கக் கூட்டங்களிலும், வகுப்புகளிலும் இது பற்றி பேசலாம்
- பட்டாசுகளின் மோசமான தன்மைகள் பற்றி குழந்தைகளே சிறு நாடகத்தை நடத்தலாம்
- ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளே பட்டாசுகளின் தீமைகள் பற்றி படச் சுவரொட்டிகள், கையால் எழுதப்பட்ட நோட்டீஸ்களை தயாரிக்கலாம்.
- "பட்டாசுகள் வேண்டாம்", "பட்டாசுகளைத் தவிருங்கள்" என்கிற பேட்ஜ்களை விநியோகித்து மற்ற மாணவர்களிடமும் பட்டாசுகளைத் தவிர்ப்பதன் அவசியம் பற்றி பேசலாம்.
- "பட்டாசு வெடிக்கமாட்டோம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கடிதங்களை குழந்தைகளே எழுதலாம். இவற்றை மற்ற வகுப்புகள், பள்ளிகளுக்கு அனுப்பலாம்.
- இது தொடர்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் உறுதிமொழி எடுக்கலாம்.

அரிசி சோறு ஆபத்தா?


உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்டவட்டமாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நாட்டில் வேதங்களிலும், சீன இலக்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதிகம் உண்டு. கிடைத்திருக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது மொத்தத்தில், கிட்டத்தட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் ஆட்சி செய்து வருவதை மறுக்க முடியாது.


ஆனால் இன்றைய நிலைமையோ.. அரிசியா? அய்யயோ..சுகர் வரும்..தொப்பை வரும்... குண்டாயிடுவோம்..என்ற பீதி! இதில் எந்த அளவு உண்மை? அரிசி ஆபத்தானதா? அவசியமில்லாததா?

கிட்டத்தட்ட 4 லட்சம் அரிசி வகைகள் உலகில் இருந்தன. சில மட்டும் இன்னும் இருக்கின்றன.கருப்பு, சிவப்பு, பழுப்பு, பச்சை என பல வண்ணங்களீலும் குட்டை மத்தியம் நெட்டை என வடிவிலும் இருக்கும் அரிசியில் இன்றைய அறிவியல் கலோரிக் கணக்கு என்ன தெரியுமா? 70% கார்போஹைட்ரேட் 6-7% புரதம் 1-2% நார் சத்து 12-13% நீர் மற்றும் சில நுண்ணிய அளவிலான கால்சியம், மக்னீசியம் முதலான கனிமங்கள். கிட்ட்த்தட்ட கோதுமை, சோளம் முதலான பிறா தானியங்களிலும் இந்த அளவில் தான் சத்து விஷயங்கள். புரத அளவில் கொஞ்சம் தூக்கலான்கவும் கார்போஹைட்ரேட் அளவில் லேசான மந்தமும் கோதுமைக்கும் சோளத்திற்கும் உண்டு. இந்த ஒரு விஷயத்தை வைத்து வடனாட்டு கோதுமைக்கும் வெளி நாட்டுச் சோளத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் போக்கு வளர்ந்து வருவது வேதனை.

இங்கு ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தட்டைப்போட்டு அரிசியை குவித்து யாரும் சாப்பிடப்போவதில்லை. அரிசியுடன் பருப்போ, குழம்போ, காயோ, கீரையோ சேர்த்துத் தான் சுவைக்கிறோம். அப்போது அரிசியுடன் சேர்ந்து பருப்பின் புரதமும், காய் கறிகளின் கனிமமும், குழம்பின் சீரணத்தை சீராக்கி, இன்னும் அதன் சத்துக்கள் அனைத்தையும் சிறப்பாக குடலுறிஞ்சிகளால் கொண்டு செல்லும் தன்மையும் கிடைப்பது தான் அரிசி கூட்டணியின் அற்புத சிறப்பு அம்சம்..ஒரு வேளை நீங்கள் கார்ன் ஃப்ளேக்ஸில் காரக் குழம்பும் புடலங்காய் பொரியலும் போட்டு சாப்பிட்டாலோ, சப்பாத்திக்கு சாம்பார் ஊற்றி பருப்பு உசிலி சேர்த்து சாப்பிட்டால் அரிசிப் பயனை கொஞ்சம் அடையலாம்.

அரிசி நம் மரபணுக்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பரிச்சியமான ஓர் உன்னத உணவு. புதிய உணவுகள் எது வந்தாலும் உடலைப் பொறுத்த மட்டில் எல்லை தாண்டிய ஊடுருவலாக மட்டுமே நம் உடல் கண்காணிக்கும். பெரிய வில்லன் இல்லை என்று தெரிந்த உடன் மட்டுமே அதற்கு இடமளிக்கும். அப்படித்தான் நாம் புது புது உணவுகளை எப்போதாய்ச் சாப்பிட்டாலும் பெரிதாய் எதுவும் துன்பப்படுவதில்லை. அதே சமயத்தில் நமக்கு அன்றாடம் பரிச்சயமான உணவுகளில் இருந்து முற்றிலும் விலகிப் போகும் போது உடம்பு சற்று கலவரப்படும். அரிசி விஷயத்தில் அப்படித்தான் நிகழ்ந்து வருகிறது. பரம்பரை அரிசி ரகங்கள் தொலைந்து போய், கூடுதல் மகசூல் என்ற கொள்கையுடனும், நீடித்த சேமிப்பிற்கென்றும் சொல்லி இந்த பாலிஷ் ரகங்கள் வந்ததில் தான் பிரச்னை துவங்கியது. பூ வச்சி, பொட்டு வச்சி, ஸில்க்கி பாலிஷ் போட்டு அழகுபடுத்த அரிசி என்ன சினிமாவில் நடிக்கவா வந்தது? அப்படித்தான் வணிகர்கள் அரிசி வணிகத்தை வசப்படுத்த, அதனை பட்டை தீட்டி வெண்ணிற முத்தாக்க முயன்றதில், அதன் சத்துக்களில் பல வீணாகி, வெறும் சர்க்கரைச்சத்தை மட்டும் அதிகம் தரும் உணவாக மாறியது அரிசியின் தற்கால அவலம்.

இன்னும் தொலைந்து போகாமல் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆங்காங்கே இருந்து தான் வருகிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கும் மாப்பிள்ளைச் சம்பா எனும் சிகப்பரிசி தெற்கத்தி மாவட்டங்களில் பிரபலம். பிரசவத்திற்குப்பின் பால் சுரப்பிற்கு அதிகம் பயன்படும் நீலச்சம்பா, குழியடிச்சான் அரிசி ரகங்கள் இன்னும் இங்கு உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறை ஊரின் முறுக்கும் அதன் மொறு மொறு ருசிக்கும் அந்த ஊரின் கல்லிமடையான் ரகம் தான் காரணம்.

கைக் குழந்தை பாலில் இருந்து திட உணவிற்கு மாறும் தருவாயில் உடைத்த அரிசிக் குருணை, பாசிப்பருப்பு சேர்த்த குழைந்த கஞ்சி இவற்றுடன் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொடுப்பது குழந்தை உடல் எடை சீராக ஏறப் பெரிதும் உதவும். அதுவும் குறைபிரசவத்தில் ஏழாம் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் இந்த கஞ்சி மிகச் சிறப்பக உதவிடும். குழந்தைக்கு கொடுக்கும் போது பச்சரிசியாகவும் இளையோருக்கு புழுங்கலரிசியாகவும் முதியோருக்கு அவலாகவும் கொடுப்பது அரிசியின் சீரணத்தை தேவைக்கேற்றபடி நெறிப்படுத்தும்.

பொதுவாக புழுங்கல் அரிசி தான் அன்றாட உணவாக எல்லோருக்கும் சிறந்தது. அரிசியின் வெளிப்புறத்தில் உள்ள சத்துக்கலை, கனிமங்களை, அதன் தவிட்டில் உள்ள விட்டமின்களை, உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தன்மையுள்ள எண்ணெயை எல்லவற்றையும் அரிசிக்குள் திணித்து ’லாக்’- செய்த அற்புத வித்தை புழுங்கல் செய்யும் முறை. எப்படி இந்த Food Processing technology வித்தையை நம் முன்னோர் செய்திருந்தனர் என்று இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும்.

சிகப்பரிசியின் ’லைகோபின்’- எனும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சத்து அன்றாடம் உடலில் சேர்ந்தால் புற்று நோயின் தாக்கும் வாய்ப்பு குறைவு.சிகப்பரிசியை அவலாகவோ அல்லது புட்டு செய்தோ குழந்தைகட்கும் முதியவருக்கும் அவ்வப்போது கொடுப்பது அவர்கள் நோய் எதிர்ப்பாற்றல் கூட மிக மிக நல்லது.

ஞவரை என்று ஒரு அரிசி ரகம் கேரள அரிசி வகையில் உண்டு. ஆயுர்வேதத்தில் மிக மிக சிறப்பாகப் பேசப்படும் இந்த அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட மூட்டுவலி வாத நோய்களுக்கு மிக நல்லது. கொஞ்சம் ரொம்பவே விலை அதிகமாக விற்கப்படும் இந்த அரிசி கூடுதல் பலனிருப்பதால் விருந்துக் இந்த ஞவரை அரிசிக்கஞ்சியை விசேஷமான நாட்களில் பயன்படுத்தலாம்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் அரிசி மீதான பழி அதிகம். சோற்றைத் தின்று தின்று இந்த வியாதி வந்திடுச்சு-ன்னு சொல்வது பிரபலமாகி வருகிறது. தவறு அரிசியில் கிடையாது. அதன் அளவிலும், அதற்கேற்ற உடலுழைப்பும் இல்லாதது தான். நல்ல உடல் பயிற்சி, நடைப்பயிற்சி அவற்றுடன் கீரை காய்கறி அதிகம் சேர்த்து அளவான புழுங்கல் அரிசி சாதம் சர்க்கரையை த்டாலடியாக உயர்த்திடாது. முழுகட்டு கட்டி சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் 2 மனீ நேரம் உறங்குவதும், எப்போதும் டென்ஷனில் அதிகம் நொறுவலுடன் கூடவே ஃபுல் மீஸ் கட்டும் ஆசாமிக்கும், ”நடையா? அதுக்கெல்லாம் நேரமே இல்லை”, எனும் சோம்பேறிகட்கும் தான் அரிசி ஆபத்து. அப்படிப்பட்டவருக்கு, அரிசி என்ன பாற்கடல் அமிர்தம் தந்தாலும் வியாதி நிச்சயமே!

மாறாக அதிகம் கோதுமை உணவை மட்டுமே உடம்பைக் குறைக்கிறேன், சர்க்கரையைக் குறைக்கிறேன் என சாப்பிடும் நம்ம ஊர்க்காரருக்கு மூலம், மலச்சிக்கல் தோல் நோய் வரும் வாயுப்பு அதிகம். அதற்காக கோதுமை கெடுதி இல்லை. அது வட நாட்டவரின் (குளிர் அதிகமுள்ளவரின்) பிரதான உணவு. நம்மைப் பொறுத்த மட்டில் அரிசியைக் குறைத்து ராகி, கம்பு, தினை என சிறு தானியங்களின் பயன்பாட்டை கூட்டுவது நல்லது.

இனி நீங்கள் ஆரோக்கியம் கருதி அரிசி வாங்கச் சென்றால், ரசாயன உரமிடாமல் வளர்த்த ஆர்கானிக் பட்டை தீட்டாத பிரவுன் அரிசி, புழுங்கல் அரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பரிச் சம்பா, இன்னமும் கொஞ்சம் தேடிப்பிடித்து பாரம்பரிய அரிசி ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா முதலான அரிசி ரகங்கள் என வாங்கிச் சமையுங்கள். அரிசி உங்கள் வீட்டு அமிர்தமாகும்!

மிளகு-ஆஸ்துமா முதல் அர்டிகேரியா அலர்ஜி புழுவெட்டு வரை!


 
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”- என்று சித்தமருத்துவ வழக்குமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின் நச்சுத்தன்மையை போக்கும் குணமுடையது என்பதுதான்.

இன்று காரமான சுவைக்கு நாம் பயன்படுத்தும் மிளகாய், நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் பரிச்சயமில்லாதது. காரமான சுவை வேண்டிய போது நம் பாட்டியும் முப்பாட்டனும் சமைத்தது
மிளகை வைத்துத்தான். சிலி நாட்டிலிருந்து சில நூறு வருடங்கட்கு முன் மிளகாய் நமக்கு அறிமுகமானபோது மிளகைப் போல் காரமாக இருந்ததால் தான் அதற்கு மிளகாய்(மிளகு+ஆய்) என்று பெயரிட்டனர். மிளகு பல ஆயிரம் ஆண்டுகளாய் நமக்கு பழக்கமான ஒன்று. ’திரிகடுகம்’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியில் உள்ள மிளகு, உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் நறுமணப் பொருள்.

இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இது குறித்து முன்பே நாம் பேசியுள்ளோம். இப்போது உள்ள கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக ’திரிதோட சமப் பொருட்கள்’ எனப்படும் மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தபட்டன. இந்த திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப்பட்ட பின்பு சேர்க்கப்படும் போது, சுவையினைப் பெருக்குவதுடன், சீரணத்தயும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும் விளையாமல் உடலைப் பேணும். அந்த திரிதாட சமப்பொருளின் ’டீம் லீடர்’ மிளகுதான். அதனால் ஒவ்வொரு உணவிலும் மிளகு இருப்பது ஹெல்த் இன்ஷியூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தைக் காட்டிலும் பாதுகாப்பு தரும்

மிளகை அதன் உலர்ந்த பழமாகவே(கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும் பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும் பயன்படுத்துவர். வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான். சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு விசேஷமில்லை. அதனால் கருப்புதான் சிறப்பு!

மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவிலும் பழங்களிலும் மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக்காமல் இருக்கத்தான். வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது. மிளகுக்குப் பதிலாக ரோட்டோரங்களில் கடற்கரையில் மிளகாய்வற்றல் பொடியைத் தூவிக் கொடுக்கப்படும் வெள்ளரியில் பயனில்லை. அது வெள்ளரியையும் கெடுக்கும்.வயிறையும் கெடுக்கும்!

வெள்ளரி, வெள்ளைப்பூசணி, சுரைக்காய், தர்ப்பூசணி, பாசிப்பருப்பு போட்டு செய்யப்படும் வெண்பொங்கல் முதலான உணவுவகைகளில் மிளகு சேர்ப்பது அவசியம்.பால் அனைவருக்கும் அவசியமில்லாத பொருள் என்றாலும், சில நேரங்களில் மருந்தாக/ ஊட்ட உணவாக சில நோயாளிகளுக்குத் தேவைப்படும். அச்சமயம் பாலில் மிளகு சேர்த்து தருவது அவசியம். சளி இருமல் இருப்பவர் பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது மிக அவசியம்.

பல நேரங்களில் ஆட்சியைப்பிடிக்கும் வரை ஒன்றாய் ஊர்வலம் வந்து விட்டு பதவி கிடைத்ததும் கூட்டணிகட்சிகளை ஓரமாய் ஒதுக்குவதுபோல, சமைத்தபின் மிளகை ஒதுக்கி ஓரமாக கழிப்பது பல நேரங்களில் நடக்கும். அது மிகத் தவறு. மிளகு மணமூட்டிமட்டுமல்ல. அதன் பிறசத்துக்கள் முழுமையாகச் சாப்பிட்டால்தான் உடலில் சேரும்.

மிளகு, ஆஸ்துமா நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய ஒரு கற்ப உணவு. மிளகில் உள்ள olioresin மற்றும் piperine, piperidine சத்துக்கள் மருத்துவ குணமுடைய முலக்கூறுகள். piperine, piperidine இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சீர் செய்யவும், அவையே சில வேளையில் அதிகபிரசங்கித்தனம் செய்யும் போது அதனை immune-modulation செய்கை மூலம்சரி செய்யவும் பயன்படுவதை பல நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் மிளகை ஒவ்வொரு உணவிலும் தூவிச் சாப்பிட வேண்டும். இருமல் இரவில் வந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, தேனும் மிளகும் சேர்த்து மிளகுக்கஷாயம் வைத்து கொடுத்தால் உடனடியாக இருமல் நின்று குழந்தை சங்கடமின்றி உறங்கும். அசீரணமுடன் சங்கடப்படும் ஆஸ்துமாக்காரர்கள் நிறைய பேர் உண்டு. மதிய உணவிற்குப்பின் 2-3 வெற்றிலையில் மிளகு சேர்த்து சவைத்து சாப்பிட இரைப்பும் குறையும். அசீரணமும் சீராகும்.

மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்துப் பின் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு தேனில் காலை மாலை உணவிற்கு முன் சாப்பிட சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லை நன்கு கட்டுப்படும்.

Urticaria எனப்படும் திடீர் திடீர் என ஆங்காங்கே உடலில் சிவந்து தடிக்கும் தோல் அலர்ஜியில் மிளகு நல்ல பலனளிக்கும். மிளகுத்தூளை காய்கறிகளில் தூவி சாப்பிடுவதுடன், தினசரி காலையில் அருகம்புல்(ஒரு கைப்பிடி), வெற்றிலை(4) மிளகு(4)- எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட தடிப்பு வருவது படிப்படியாக மறையும். எந்த ஒரு சாதாரண தோல் அலர்ஜி ஏற்படும் போது முதல் கை வைத்தியமாக மிளகை கஷாயமாக்கி சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் அலர்ஜியை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. முகம் கைகால் வீக்கத்துடன் மூச்சிரைப்பு உண்டாகி, சிறுநீர் தடை ஏற்படும் அலர்ஜிக்கு மிளகை தேடிக் கொண்டிருக்க்க் கூடாது

வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். மிளகு அசீரணத்தை சரிப்படுத்தக்கூடியதென்றாலும், குடற்புண்கள் இருப்பவருக்கு அதன் வெப்பத் தன்மையால் வயிற்றெரிச்சலைத் தோற்றுவிக்கும். புலால் உணவு சாப்பிடும் போது கண்டிப்பாக மிளகு சேர்க்கப்பட வேண்டும். மிளகு புலால் உணவின் சீரணத்தைத் துரிதப்படுத்துவதுடன், அதில் ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்கள் இருப்பின் அதனால் ஏதும் தீங்கு விளையாமல் இருக்கவும் மிளகு பயன்படும்.

மிளகு ஒரு வெளிமருந்தாகவும் பயன்படும் பொருள். புழுவெட்டு எனும் aloepecia areata –விற்கு பல நேரங்களில் எந்த மருந்தும் பலனலளிப்பதில்லை. மிளகு தூள், வெங்காயச் சாறு, உப்பு கலந்து புழுவெட்டுள்ள பகுதியில் மெலிதாகத் தேய்க்க முடி வளரும்.

மிளகில் கால்சிய சத்து உள்ளது சிறிதளவு விட்டமின் A சத்துள்ளது. மிளகின் புரதமும், னார்ப்பொருலும், அதிலுள்ள நைட்ரஜன் சத்தும் கூட மிளகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் அளவில் குறைவாக இருந்தாலும், அதன் நிறைவிற்குக் குறைவில்லாதவை.

குழந்தைப்பருவம் முதலே மிளகின் மகத்துவத்தை புரியும் படி மிரட்டாமல் சொல்லிக் கொடுத்து, மிளகை ரசித்து உண்ண குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் வரும் முன் காப்பதில் மிளகிற்கு இணை ஏதுமில்லை.

ஆஸ்துமாவிற்கான உணவு

”குளிர் காலத்தில வரும்; தூசியிலே நின்னா வரும்”, என்ற நிலைமையத் தாண்டி, ’எப்போதுமே நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் என நெஞ்சுக்குள் ஏதோ சிம்பொனி கேட்டுக் கொண்டேயிருந்த ஆஸ்துமாக் காலம் அது.


டவுண் வாகையடி முக்கு வரை பஸ்ஸில் போய், டபுள்ஸ் வைக்கத் தெரியாத அப்பாவின் சைக்கிளுக்காக காத்திருப்பேன். திருனெல்வேலி டவுணில் ,அந்த எண்பது வயதுக் கணபதியாபிள்ளை ஓமியோபதி டாக்டர் தாத்தாவைப் பார்க்கத் தான் இந்த பயணம்., தன் வீசிங்கிற்காக அந்த இனிப்புச் சவ்வரிசிகளை எடுக்கும் போது, “என்ன சாப்பிட்டான் அவன்?” என திட்டுவாரே, அதற்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்திக் கொண்டிருக்கும் போது அப்பா அருகில் வந்து நிற்பார். ”ஏல, ரொம்ப நேரமா நிக்கியா? ”ஏபிசி பஸ் ஸ்பீடுக்கு என்னாலே சைக்கிள் மிதிக்க முடியாதுல்லா, என்று கூறிக் கொண்டே, ஏறிக்கோலே” என்பார். நான் பின் ஸீட்டில் ஏறி அமர்ந்து கொள்ள, டபுள்ஸ் அடிக்க தெரியாத அப்பா, வீசிங்கில் நடக்க முடியாத என்னை உட்கார வைத்து உருட்டிக் கொண்டே டாக்டர் வீட்டுக்குச் செல்வோம்.

”ராத்திரியில் அதிரசம் திங்காதே! சளி பிடிக்கும்னு சொன்னா கேக்கிறியா? இதுல சாயந்திரம் கிரேப்ஸ் வேற தின்னியாமே?..அம்மா சொன்னா..ஏன் சாப்பாட்டில கட்டுப்பாடே இல்ல..அப்புறம் எப்டி வீசிங் சரியாகும்..?” திட்டு முடியும் போது டாக்டர் வீட்டு வாசல் வந்திருக்கும்..ம்ம் அப்புறம் அவர் ஆரம்பிப்பார். எனக்கு மட்டும்,” ஏன் இப்படி? அத திங்காத; இத திங்காதேன்னு. ஜெயந்தி மட்டும் எல்லத்தையும் சாப்பிடறா அவளுக்கு ஒண்ணும் வரலே; எனக்கு மட்டும் இப்படி இழுக்குது..”அன்றைக்கு எனக்கு இருந்த கேள்வி இன்னும் பலருக்கு இப்போதும் இருக்கிறது.


காய்ச்சல் தலைவலியில் இருந்து எச்.ஐ.வி.எயிட்ஸ் வரை நோயினை விரட்ட, உணவு ஒரு முக்கிய அம்சம். ஆஸ்துமா சிகிச்சையில் உணவு ஒரு மருந்தும் கூட.எப்படி?
ஆஸ்துமா இருந்தால் காலை பானமாக மறந்தும் பாலோ அல்லது எந்த பவர் சீக்ரட் எனர்ஜியோ கலந்த பாலோ கொடுக்கத் தேவையில்லை.. பல் துலக்கியதும் முதலில் 2-3 குவளை நீர் வெதுவெதுப்பான நிலையில் அருந்துவது நல்லது,. அதன் பின் பால் கலக்காதத் தேநீர் சிறந்தது. “காபி/தேநீர் சாப்பிட்டா அதே மாதிரி கருப்பாயிடுவே,” என்று உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தயவு செய்து பூச்சாண்டி காட்டாதீர்கள். வெளுத்த பாலை விட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்.

நல்ல வீசிங்கில் இரவில் சிரமப்பட்டிருந்தால் கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்து போட்டு கசாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நெஞ்சில் இரவில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி உடனடி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக இந்த கலவை கசாயத்தைக் காலை பானமாக குடித்துவர இரைப்பு கண்டிப்பாய்க் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால் முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவில் வீசிங்கில் சிரமப்பட்டவர்க்கு காலை உணவு சாப்பிடப் பிடிப்பதில்லை. பசியும் இருப்பதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகு ரச சாதம், இட்டிலி என ஏதொவொன்றை சாப்பிடுவது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல், அரை வயிற்றிற்கு சாப்பிடுவதும் வேண்டும். இடையில் தேநீர் சப்பிடுவதும் நல்லது.

மதிய உணவில் நீர்சத்துள்ள சுரை,புடலை, சவ்சவ் இவற்றைத் தவிர்க்கலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்க வைக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வாயு உண்டாக்கும், செரிக்க நேரமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரை தவிர்க்கலாம். சில வகை காய்களுக்கு சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வெண்டும். அதே சமயத்தில் தன் நாவிற்கு பிடிக்காததை எல்லாம், “அய்யோ எனக்கு பவக்கா அலர்ஜி! வெண்டக்கா ஒத்துக்காது” என நடிக்கத் துவங்கினால் இழப்பு கூடும்; இழுப்பும் கூடிடும்.


மாலையில் தேநீரோ/ சுக்குக் கசாயமோ எடுப்பது இரவு சிரமத்தை பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவினை முடிந்தவரை ஏழரை மணிக்கு முன்பதாக எடுத்துப் பழகிக் கொள்வது நல்லது. கோதுமைரவை கஞ்சி, இட்டிலி நல்லது. பரோட்டா, பிரியாணி என படுக்கைக்குப் போகும் முன் புகுந்து உணவில் விளையாடுவது நல்லதல்ல. படுக்கைக்கு போகும் போது காலிவயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும்.

பல ஆஸ்துமா நோயினருக்கு வாழைப்பழம் குறித்து தேவையற்ற அச்சம் உள்ளது. நாட்டு வாழைப்பழம் (தென் மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது), மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.மலத்தையும் இளக்க அது உதவிடும். ஆற்றலையும் தரும். மோரிஸ் அல்லது தற்போது சந்தையில் கிடைக்கும் ஹ்ய்பிரிட் மஞ்சள் வாழை கடைசிச் சாய்ஸாக இருக்கலாம். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை பழங்களை மருந்து எடுத்துவரும் காலத்தில் கண்டிப்பாக 6-7 மாதம் முற்றிலும் தவிர்ப்பது வேண்டும். பகல் பொழுதில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகள் சிறிது மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.

இனிப்பு பண்டங்கள் ஆஸ்துமாவிற்கு நல்லதல்ல. ரொம்பா ஆசைப்பட்டால் பகல் வேளையில் கொஞ்சமாய் சுவைக்கலாம்.அதுவும் குளிர் காலத்தில் தேவையில்லை. 

பெரியவர்கள் மதிய உணவிற்குப் பின்னர் 2 வெற்றிலை சவைப்பதும் ஆஸ்துமாவிற்கு நல்லது தான். வெற்றிலையும் மிளகும் ஆஸ்துமா நோயில் பயனளிப்பதை நம்ம ஊர் சித்தர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு ஆய்வாளர்களுமே சொல்லியுள்ளனர். வெற்றிலையுடன் புகையிலையை மட்டும் மறந்தும் சேர்த்துவிட வேண்டாம். புற்று நோய் வந்துவிடும்.

சிவப்பரிசி அவல், புழுங்கல் அரிசி கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக் கீரை பொரியல், மணத்தக்காளி வற்றல், இலவங்கப்பட்டைத் தேநீர், இவையெல்லாம் ஆஸ்துமாகாரர் மெனு கார்டில் அவசியம் இடம் பெற வேண்டும்.
சிறந்த உணவுத் தேர்வுடன், சரியான சித்த மருத்துவம், மூச்சுப்பயிற்சி எனும் பிராணாயாமம் இருந்தால் ஆஸ்துமாவைக் கண்டு பயம் கொள்ளத் தேவையே இல்லை.

பயறுகள் - மருத்துவப் பயன்கள்


 ஏழைகளின் புலால் என்று அழைக்கப்பட்டது பயறுகள். ஆனால் இன்று  பணக்காரனோ ஏழையோ பயமில்லாத முதுமைக்கான முதல் தேர்வு பயறுதான் என்ற நிலை. அரிசி, கோதுமை தானியங்கள் மீது அலாதி பயம் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் பயறுகள், தன்னுள்ளே பொதிந்துள்ள புரதத்தாலும், அதன் தாவர நுண்கூறுகள் தரும் அலாதி மருத்துவ பயன்களாலும், அன்றாட உணவில் இடம்பெற வலியுறுத்தப்படுகின்றன.
எது பயறு? சிப்பிக்குள் பொதிந்துள்ள முத்தைபோல், அழகான பச்சை நிற கதவுகளுக்குள் பத்திரமாய், வரிசையாய் பொதித்து வைக்கப்பட்டு விளையும் அவரைக் குடும்பத்து தாவரங்கள்தாம் இந்த பயறுகள். பாசிப்பயறு, உளுந்து, துவரை, மைசூர் பருப்பு, கொண்டைகடலை, பட்டாணி, ரஜ்மா.... என இதன் பட்டியல் நீளம். முழுதாய் இருப்பின் பயறு என்றும், உடைத்து இருந்தால் பருப்பு என்றும் செல்லமாய் அழைக்கப்படும் இந்த உணவு ஓர் உன்னத உணவு.

தானியமும் பயறும் உணவுக்குடும்பத்தின் தலைவனும் தலைவியும் மாதிரி. ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு வித புரதமும், கூடவே கார்போஹைட்ரேட்டும் கொண்டிருக்கும். பயறும் அப்படித்தான். அரிசியில் இல்லாத புரதச்சத்து பாசிப்பயறில் இருக்கும்; உளுந்தில் இருக்கும். அதனால் தான் பயறையும் அரிசியையும் கூட்டணியாகக் கொண்டு இட்லியும் பொங்கலும் அன்று படைக்கப்பட்டன. கார்போஹைட்ரேட், புரதம் என்ற அறிவியல் தெரியாத போது அதன் அவசியம் தெரிந்து கூட்டாய்ச் சமைத்ததை நினைக்கையில் வியப்பும் பெருமிதமும் வருகிறது. இட்லி சாம்பார் சட்னி என்பது சரிவிகித சம உணவு என்பது புரியாமல் ஓட்ஸுக்கும் பிட்சாவுக்கும் வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கும் நாகரீகக் கூட்டம் நகைப்பிற்குரியது.

சாதாரணமாய் 20-25% புரதச்சத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் பயறுகள், வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவை. அதன் அவசியம் புரியாமல் ஒதுக்கியதில்தான், எத்தனையோ ஊட்டச்சத்து பானங்கள்  கலர்கலராய் விளம்பரங்களுடன் விடாது  நம்மை விரட்டி வீட்டுக்குள் வந்து விட்டன. உயரமாய் வளர வைப்பேன்; புத்திசாலியாக்குவேன்; என உள்வரும் அத்தனை ஊட்ட உணவுகளுக்கும் சிறிதும் சளைத்ததல்ல இந்த பயறுகள். நோய் எதிர்ப்பாற்றல் நன்றாயிருக்க சரியான பயறு உணவு தினசரி அவசியம். பயறுகள் ஸிக்ஸ் பேக் கனவான்களுக்கான முக்கிய உணவு. தசைகளை இறூக்கமாக வளர்ப்பதற்கு பயறு அவசியம். கூடவே உடற்பயிற்சியும் வேண்டும். அதை மறந்து, “சார்! தினம் முளைப்பாரி கட்டி பல பயறு சாப்பிடுகிறேன். ஸிக்ஸ் பேக் வரலையே” –என்று கேட்டால், சத்தமாய் ஏப்பமோ இல்லை வேறு எதுவுமோ வரலாம். ஸிக்ஸ் பேக் வராது. உணவும் உடலுழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் மட்டுமே அரோக்கியமும் அழகும் வசப்படும். பயறு விஷயத்திலும் அப்படித்தான்.

சர்க்கரை நோயாளிகளின் அலாதிப் பசியைப் போக்குவதிலும், அதனால் திடீர் சர்க்கரை உயர்வு(hyperglycemia) ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலும் சிறப்பானவை. சர்க்கரை நோயில், இன்று வலியுறுத்தப்படுவது லோ கிளைசிமிக் உணவுகளைத்தான். பயறுகள் லோ கிளைசிமிக் தன்மை கொண்டவை. மாலை வேளையில் பசியுடன் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய பாசிப்பயறு சுண்டலோ, சிவப்பு நிற மூக்குக் கடலைச் சுண்டலோ சிறந்த சிற்றுண்டிகள். அவை உடனடி பசியையும் குறைப்பதுடன், இரவில் அதிக பசியில், அதிக உணவை சாப்பிட்டு காலையில் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து கலவரப்படுத்தாமல் இருக்க உதவிடும்.
பெரும்பாலான பயறுகள் கொழுப்புச் சத்து குறைவானவை..அல்லது சற்றும் இல்லாதவை. அதிக கொழுப்புச் சத்து உள்ள  நபர்கட்கு, அன்றாட உணவுத் தேர்வில் பயறுகள் இருக்கும் போது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு (low density lipo protein-LDL)கிட்ட்த்தட்ட 22% குறைவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பயறுகளின் அரசி என்றால் உளுந்தைச் சொல்லலாம். பெண்களின் கருப்பையை வளமாக்குவதில் உளுந்துக்கு இணையான உணவு ஏதும் இல்லை. சோயாவும் அது போன்றதே. உளுந்தின் முழுபயறை சப்பாத்திக்கு தால்செய்வது போல வாரம் இருமுறை செய்து வய்துக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டில் செய்வது நல்லது. உளுந்தக்களிக்கு கொந்தளிக்கும் பல குமரிகள் சப்பாத்திக்கான தால் என்றதும் சாத்வீகமாகுவது சமீப காலத்திய மாற்றம். உளுந்தைப்பொறுத்த மட்டில் வாய்ப்புக் கிடைத்தால் தொலி நீக்காதபடி பயன்படுத்துவது நல்லது. தொலியில் உள்ள நிறமிச் சத்து பல கருப்பை சார்ந்த நாட்பட்ட நோய்களை நீக்க்கூடியதும் கூட.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை, இவற்றை முளைகட்டிச் சாப்பிடுவது அதன் புரதச்சத்து உடலில் விரைவாக சேர ஏதுவாகும். அதே நேரத்தில் முளை கட்டிய பயறுகள் உடல் எடை குறைத்திடவும் உதவிடும். ஆதலால், வளர வேண்டிய சிறு குழந்தைகளுக்கு வருத்து பொடித்த பயறுக் கஞ்சியும், உடல் எடை குறைய டயட்டில் இருக்கும் நபர்கட்கு  முளைகட்டிய பயறும் நலம் பயக்கும். பால் புரதத்தை விட, புலால் புரதத்தை விட, பயறுப்புரதங்கள் விலை குறைந்தவை; உடலில் முழுமையாய் அதிகமாய் உட்கிரகிக்கப்படுபவை. குறிப்பாய் பாசிப்பயற்றின்protein efficiency ratio பிற புலால் புரதங்களைக் காட்டிலும் துரிதமானது.

அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பது புரதத்திற்கும் பொருந்தும். போஷாக்கா வளர்க்கணும் என்றோ.. நாங்க வசதிபடைத்தவர் என நினைத்தோ பொங்கலில் முந்திரியை கரண்டி கரண்டியாக அள்ளிப்போட்டு சாப்பிடுவதும், வருத்த முந்திரியில்லாமல் எப்டீங்க போர்டு மீட்டிங் என வாரம் மூன்று மீட்டிங் சாப்பிட நடத்துவதும் இரத்தத்தில் யூரிக் அமிலத்தை உயர்த்தி வலது கால் பெருவிரல் வீங்கி வலிக்கிறதே யார் கிட்ட போகலாம் என யோசிக்க வைக்கும்? கவுட் ஆர்தரைட்டிஸ் எனும் ஒரு வித மூட்டுவலிக்கு அதிக புரதம் ஒரு முக்கிய காரணம். அதிக புரதம் உடலில் கொழுப்பாய்ச் சேமிக்கப்படும் என்பதாலும் அளவிற்கு அதிகமாக பயறுகள் அவசியம் இல்லை. அதன் மேலும் பயறு சிலருக்கு வாயுவை அதிகப்படுத்தும் என்பதால், எப்போதும் இஞ்சி, பூண்டுடன் பயறைச் சாப்பிடுவது சரி. வாய்வுக் கோளாறு ஏற்கனவே உள்ளவர்கள் பாசிப்பயறு, உளுந்து மட்டும் சேர்க்கலாம். பிறவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சின்ன வயசிலேயே..பெரிய மனுஷியாவது....



கருத்தரிக்கும் கடமை ஒன்றுக்காகமட்டும் படைக்கப்பட்டதல்லமாதவிடாய் என்பதை நவீனஅறிவியல் உணர்ந்தது சமீபத்தில்தான்மாதவிடாய் துவங்கியதுமுதல் முடியும் வரைஅந்த மூன்றுநாட்கள் சோர்வையும் வலியையும்களைப்பையும் போக்கும்விஷயத்தில் மட்டும் தான் கவனம்கொண்டிருந்தது மருத்துவ உலகம்.இன்னும் கருத்தரிப்பு சார்ந்தவிஷயத்தில் வரும்இடையூறுகளுக்கு மட்டும் மாதவிடாய் உற்றுப்பார்க்கப்பட்டது.

மாதவிடாய் முடிவுக்குப் பின் வந்தகால்சிய குறைவின்ஆஸ்டியோபோரோசிஸ்அல்சர், மார்பகப் புற்றுநோய் மற்றும் மனஅழுத்தம் ஆகிய துன்பங்கள்தாம் அடஇந்த மாதவிடாய் பல்வேறுஉடல் செயல்பாடுகளுடன்தொடர்புடையது போலும் என்றபுரிதலை துவக்கியது.
சரியாக 11-14 வயதில் துவங்கும்இந்த மாதவிடாய் தற்போது 8வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது..ஏனிந்த அவசரம்எப்படிநிகழ்கிறது இந்த மாற்றம்என்ற சிந்தனை இன்று பல மருத்துவஆய்வாளர்களிடையே வேகமாக எழுந்துள்ளதுஉணவாவாழ்வியலா?பாரம்பரியமாசுற்றுச்சூழலில் நிகழும் மாசுக் குவியலாமன அழுத்தமா?மருந்தாஇன்னும் என்ன காரணத்தால் இந்த அவசரமாக வெகு இளம்வயதில்ஏற்படுகிறது இந்த மாதவிடாய் என்ற ஆய்விற்கு இன்னும் சரியாய் முடிவுகிடைக்கவில்லை.. ஆனால் பல முக்கிய காரணங்கள் முதல் ஆய்வுத் தகவல்அறிக்கைகள் வந்து சேர ஆரம்பித்துவிட்டனஎன்ன அவை?

முதலில் பால் “அடிக்கடி பால்வேண்டாம் என எழுத துவங்கியதில்,லல்லுபிரசாத் தலைமையில் பால்கம்பெனிகாரர்கள் பலர் என்று என் பல் பிடுங்க என்று வரப்போகிறார்களோத்தெரியவில்லை..இருந்தபோதும் பால்மீதான குற்றச்சாட்டுக்கள்வலுப்பெற்றுகொண்டே இருக்கின்றன.சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில்சிறுவயதில் அதிகம் பால் மட்டும்குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாகபூப்பெய்துகிறார்கள் என்ற தகவல்வந்துள்ளதுஇனி பெண் குழந்தைகளை கூடுதல் பால் கொடுத்து, பாலூட்டிவளர்த்த கிளியாக்க வேண்டாம்..அப்புறம் 4 ம் வகுப்பு படிக்கையிலேயேஅதிகம் அவஸ்தைப்பட வைக்கும் அந்த குழந்தையை.
பால் மட்டுமல்ல..பால்பவுடர் கலந்துசெய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இதுநிகழக் கூடும்கன்னாபின்னாவென மில்க்சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தரவர்க்கத்தில் அதிகம்..என் குழந்தை கண்டகண்ட மிட்டாய் எல்லாம் சாப்பிடுவதுகிடையாதுஒன்லி மில்க் சாக்லேட் என்றுபெருமைப்படும் அப்பாவி அம்மாவின்குழந்தை ஓவர் வெயிட்டாகத் தான் திரியும்.இந்த குட்டி குண்டுக்கள் கூட விரைவில்பூப்படையும் என்கிறது அறிவியல்இன்னும்இது போன்ற சிறுவயது குண்டு குழந்தைகள்விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவதுமட்டுமல்லாமல்சரியாக மாத மாதம்இதனைப் பெறுவதில்லை.. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், இளவயது குண்டும், சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.
அதிகபட்ச புலால் உணவை இளம்வயதில் சாப்பிடுவதும் சீக்கிரம் பூப்பெய்வதற்கான காரணம் என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. “சிக்கனில்லாமல் எம் பொண்ணு சாப்பிடவே மாட்டாளாக்கும் என்று இனி பெருமை கொள்ள வேண்டாம். அதிலும் தற்போது மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள்..இந்த மேனாட்டு கோழிக்கறி கடைகள் பல இப்போது படு அலங்காரமாக வந்திருக்கிறதே! அதில் பள்ளிப்பாளையம் நாட்டுக் கோழியை வைத்து நக்கட்ஸ் செய்கிறார்களா அல்லது சிகாகோ கோழியா என்பது எனக்கு தெரியவில்லை..ஒரு வேளை பாஸ்போர்ட் விசா இல்லாமல் வந்த கோழிக்கறி எனில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. காலை இட்லிக்கு கொத்துக்கறி; மத்தியானம் சிக்கன்பிரியாணி, மாலை சிக்கன் லாலிபப் என புகுந்து விளையாடுவதை, “வளர்ற பிள்ளை அதைப்போயி.. என பேசாமல் இருக்க வேண்டாம்.
பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது. இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம் என மேல்நாடுகளில் சண்டையே நடந்து வருகிறது. நாம தான் இந்தியாவை உரம் போட்டு வளர்க்க, அத்தனை வெளிநாட்டுக் குப்பையையும் சிகப்புக்கம்பளம் விரித்து கடை விரிக்கிறோமே! நாளை நாமும் இந்த கூக்குரலிட வேண்டியிருக்கலாம்.
மாடு கூடுதலாகப் பால் பீச்சRCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்ப்பதை மேனாட்டு FDA – வே அங்கீகரித்திருக்கிறது. நம்ம ஊர் பாலிலும் அது இருக்க கூடும் என கொஞ்ச நாள் முன்னால் ஒரு பயம் இருந்துவந்தது. பல இடங்களில் பால் அதிகரிக்க வைக்க மறைமுகமாக மருந்துகள் பயன்படுத்தியதை கண்டறிந்து சில  நடவெடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தற்போதைய நிலைமை அந்த கோமாதாவிற்குத்தான் வெளிச்சம். இந்த RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.
அட! கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு ஒரு செய்தி...மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகமாம். அதுவும் தற்போது மார்பகப் புற்றுநோய் மிக அதிகமாக வருவதில் மருத்துவ உலகம் திணறிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு கூடுதல் செய்தி.. விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. வணிக உத்திகள் சரியாக இருந்தால் எதையும் எங்கும் கொண்டு செல்ல்லாம் என்ற விதிக்கு தற்போதைய உதாரணம், சத்தியமங்கலம் காடு முதல் சங்கரங்கோயில் முள்ளிக்குளம் வரை அமோகமாக விற்கப்படும் ஓட்ஸ்தான். இந்த ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் எள், உளுந்துக்கு இணையாக ஓட்ஸ்-உம் ஒய்யாரத்தில் உள்ளது. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு, நினைச்சு  நாகரீக பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு-என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது. விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.