Sunday 26 June 2011

இவன் ஒரு வம்பன்..!





இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால்  பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ..
கல்லை தூக்கி எறிந்தோ..
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு..,

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..!

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை;
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!

சாய்பாபா மீண்டும் அவதரிப்பார் !


இறந்தவர்களை பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதென்பது  மனிதாபிமான ரீதியிலும் நம் மரபுகளின் ரீதியிலும் சரியான செயல் அல்ல. அது போல ஒருவரின் இறப்பிலே சந்தோசப்படுபவனும் மனிதன்  அல்ல. என்னை பொறுத்தவரை சாய் பாபா என்பவர் இந்த பூமியில் பிறந்து இயற்கையின்  நியதியால் இறந்து போன கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவரே.

நான் ஒன்றும் நாஸ்தீகன் அல்ல. உங்களுக்கு தெரியும் கிராம புறங்களிலே உள்ள மக்கள் ஒப்பீட்டளவில் கடவுள் நம்பிக்கை கூடியவர்கள். அதே கிராமப்புறம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்  நான். இது வரை நான் வாழ்ந்த சூழலிலே ஒரு நாஷ்தீகர்களை கூட கண்டதில்லை.



நான் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலே எனக்கு கற்ப்பித்த ஆசிரியர்கள் சிலர் பாபாவின் பக்தர்களாக இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பாபாவின் அருமை பெருமைகள் அற்புதங்கள் என்று பல கதைகள் எமக்கும் சொல்வார்கள். அவற்றை எல்லாம் நம்பி நானும் அவரை கடவுளின் அவதாரமாகவே நம்பியிருந்தேன் என்பதை விட நம்பவைக்கப்பட்டேன் என்று சொல்வதே சரியானது.  அநேகரின் நிலைமையும் இவ்வாறுதான் ( நம்ப வைக்கப்பட்டார்கள்)  என் வீட்டு சாமி அறையையும்  சாய்பாபா அலங்கரித்தார். ஏன்  என் பாக்கற்றில் இருக்கும் பர்சிலும் சாய் பாபா குடிகொண்டிருந்தார். பள்ளி பருவத்திலே புத்தக பூச்சிகளாகவே அதிக தருணங்கள் இருந்ததால பாபாவுடைய   நியாய தன்மைகளை பற்றி சிந்திக்க தோன்றவில்லை. ஆனால் வெளி உலகுக்கு வந்த போது தான் அவ்வப்போது அறியும் செய்திகளால் எனக்குள்ளும் சில சந்தேகம் வந்தது.

1. கருணாநிதி சச்சின் டென்டுல்லகர் போன்ற முக்கிய தலைகள் புட்பபதிக்கு சென்றால் சென்ற அடுத்த நிமிடமே பாபாவை அருகில் சென்று சந்தித்து போஸ் கொடுக்க முடிகிறது. ஆனால் கடைக்கோடி பக்தன் சென்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டும், ஏன் அவரின் தரிசனம் கிடைக்காமலே திரும்பியவர்களும் உள்ளார்கள்.  இது என்ன நியாயம். ஆக கடவுளை சந்திக்க பணபலமும் அதிகார பலமும் செல்வாக்கு செலுத்துகிறது என்று கொள்ளலாமா?

2 . இவர் வீபூதி கொடுக்கும் போது பார்த்தீர்கள் என்றால், அனைவருக்கும் கொடுப்பதில்லை. சூழ்ந்திருக்கும் கூட்டத்திலே சில பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து கொடுப்பார். "அதிஷ்டலாப  சீட்டு போல". இது என்ன நியாயம்? இங்கே வீபூதி கிடைக்காதவனது மனநிலை எவ்வாறு இருக்கும்.  "நான் எதோ குற்றம் செய்துவிட்டேன். அது தான் என்னை சாமி கண்டு கொள்வதில்லை" என்று தினமும் அவன் மனசாட்சி அவனை குழப்பாதா. (அப்புறம் தான் தெரிஞ்சுது சாமி எதற்கு விபூதியை சிக்கனமா கொடுக்கிறார் என்று)

3. அதோடு இவர் வீபூதி குங்குமம் லிங்கம் ஆகியவற்றை மட்டும் தான கொடுப்பார்.  இதை விட மனிதனுக்கு முக்கியமான தேவைகள் இல்லையா? ஏன் மும்பையிலே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன் தன் சக்தியால் அதை  தடுத்து நிறுத்த  முடியவில்லை?   இயற்க்கை அழிவுகளை தவிர்க்க முடியாது தான் ஆனால் அது பற்றி  முற்கூட்டிய எச்சரிக்கை விடலாமே சுவாமியார்!  இலங்கையில்  நடந்த யுத்தத்தை கூட தடுத்து நிறுத்த முடியவில்லை, ஏன் இலங்கையிலே இவருக்கு  பக்தர்கள் இல்லையா? ஈழத்திலே நான் கண்ட வரை பாபாவுக்கு அதிகளவான பக்தர்கள் உள்ளார்கள். பாபாவை பார்ப்பதற்கென்றே இந்தியாவுக்கு படை எடுத்தவர்களையும்  கண்டுள்ளேன்.



சரி இவையெல்லாம் கால நியதி என்றால் மனித ரூபத்திலே கடவுள் எதற்கு? வீபூதி  கொடுப்பதற்கும் லிங்கம் எடுப்பதற்குமா?

சிலர் சொல்கிறார்கள், அவர் சாமியார் என்பதற்கு மேலாக மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம். ஆனால் இது எனக்கு நியாயமான கருத்தாக தெரியவில்லை. உதவிகள் முறையான வழிகளில் செய்தாரா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் அதன் "மூலம்"!  தன் வீட்டு சொத்திலா செய்தார். அப்பாவி மக்களை ஆன்மீக வாதி என்ற போர்வைலே ஏமாற்றி அவர்களிடம் இருந்து பெற்ற பணத்திலே அரசியல்வாதிகளை சரிப்படுத்தி  சிறு பகுதியை மக்களுக்காக செலவழித்தார்.  இவர் கடவுளாக இருந்தால்.... தான் எப்போது இறப்பேன் என்று அறிந்திருப்பார். அவ்வாறு அறிந்து  அதற்க்கு முன்னரே தன்னிடம் உள்ள சொத்துக்களை மக்களுக்காக வழங்கியிருக்க வேண்டாமா?  இப்பொழுது பாருங்கள் இவர் பேரிலே தெக்கு நிற்கும் கோடிகணக்கான சொத்துக்காக வெட்டுக்குத்து, கொலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!

பாபா சொல்லிருக்கார், நான்  மீண்டும் அவதரிப்பேன், அவதரித்து  36 வயசு வரை இந்த பூமியிலே வாழ்வேன் என்று! இது உண்மையா? ஆமாம் இது உண்மை தான்........... காவி உடுத்தவனை கடவுளாக பார்க்கும் மக்கள் உள்ளவரை யுகங்கள் தோறும் பாபாக்கள் அவதரிப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை!



தனக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் பாபாவும்  விஞ்ஞானத்தை தானே  நாடினார். இதன் மூலம் மெய்ஞ்ஞானத்தை  விட  விஞ்ஞானம்  தான் உயர்ந்தது என்று "கடவுள் பாபா" நிரூபித்துவிட்டதாக கூட வாதிடலாம்.  இந்த உலகிலே பிறந்த உயிரினங்கள் யாவும் ஒரு நாள் இறக்க தான் செய்யும்.  விஞ்ஞானத்தாலே  இறப்பை தள்ளிப்போடலாமே ஒழிய  ஒரு போதும் தவிர்க்க முடியாது. 


மீண்டும் சொல்கிறேன் மனிதன் கடவுளாக முடியாது. கடவுளும் மனித ரூபத்தில் வந்து நான் தான் அவதார புருஷன் என்று தன்னை விளம்பரப்படுத்த மாட்டார். அவ்வாறு வந்து எவனாவது சொன்னால் அவனை பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே தான் அனுமதிக்க வேண்டும். நான் பாபாவின் இறப்பை நினைத்து சந்தோஷபடவில்லை. அப்படி சந்தோஷ படுவதற்கும் ஏதுமில்லை. பாபாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Saturday 25 June 2011

ஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய


 கணினி இல்லாமல் எதுவும் இல்லை என்று உள்ள இந்த காலக்கட்டத்தில் தினம் தினம் புது புது வைரஸ்கள் உருவாகி நம் கணினியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த வைரஸ்களை தடுக்க எவ்வளவு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரசும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்ததாக உள்ளது. ஆகையால் நம் பைலை எப்படி ஒரே நேரத்தில் 15+ ஆன்ட்டிவைரசில் ஸ்கேன் செய்வது என்று காணலாம்.

 ஆனால் நம் கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட  ஆன்டிவைரஸ் நிறுவ சில நிறுவனங்கள் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நாம் ஒரே ஒரு ஆன்டிவைரஸ் மட்டுமே நம் கணினியில் நிறுவ முடிகிறது. ஆகையால் ஒரு ஆன்டிவைரசில் மட்டுமே நம் பைல்களை ஸ்கேன் செய்து வந்தோம்.                

                                                                                                                                                                                                                                                                                         
  •  குறிப்பாக நமக்கு இமெயில் வரும் பைல்கள் நம்பக தன்மை வாய்ந்ததா என்று இந்த     முறையில் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த குறையை போக்க நமக்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
     
  1. மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Choose file என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  2. உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்ய விரும்பும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  3. அடுத்து அதற்கு கீழே உள்ள Submit file என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த பைல் வைரஸ் ஸ்கேன் ஆகி ஒவ்வொரு ஆன்டி வைரசிற்கு நேராக அதான் முடிவுகள் வரும். 

மேலே படத்தில் உள்ளதை போல அனைத்து ஆன்டிவைரசிலும் Found nothing என்று முடிவு வந்தால் உங்கள் பைல் 100% பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் இந்த பைலை தைரியமாக உபயோக படுத்தி கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் கிளிக் http://virusscan.jotti.org/enசெய்யவும்

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?.


உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க. இன்று கணணி , இணையம் இல்லை என்றால் வேலை எதுவும் ஓடாது என்பது போல நம் வாழ்வில் அவசியமான சாதனமாக மாறிவருகிறது.
 

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை  இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திரு...ந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி  delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

Megavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?


அநேகமானோர் Megavideo என்னும் தளம் பற்றி அறிந்திரிப்பீர்கள்.திரைப்படங்களை online இல் பார்க்க ஒரு சிறந்த தளம் இது.திரை நல்ல தெளிவாகவும் இருக்கும்.ஆனால் இதில் நமக்கு உள்ள குறை ஒரு திரைப்படத்தை தொடர்ச்சியாக முழுமையாக பார்க்க முடிவதில்லை.அதாவது ஒரு நாளைக்கு 54 நிமிடங்கள்  மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.ஆவலுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடை நடுவில் திரை நின்றதும் மிகவும் சலிப்பாக இருக்கும்.  எனினும் இக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு வழி உண்டு. முதலில் நீங்கள் megavideo வில் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் link ஐ  copy பண்ணி கொள்ளுங்கள்.அதன் பின்னர்  http://ezywatch.com/index.php   என்னும் ஒரு  தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
                             

அங்கே மேலே படத்தில் உள்ளது போல ஒரு தளம் வரும் . அதிலே  watch என்னும் எழுத்துக்கு முன்னால் உள்ள பெட்டிக்குள் நீங்கள் copy பண்ணிய              லிங்க் ஐ paste பண்ணி, watch ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய படத்தை இப்பொழுது தடை இன்றி முழுமையாக  பார்க்கலாம். எப்புடி எல்லாம்
கண்டுபிடிக்கிரான்கையா.....

புகைப்படங்களை பெயர் கொடுத்து ஒழுங்கமைப்பது எப்படி ..?



 டிஜிட்டல் கேமராவிலிருந்து அல்லது கைபேசியில் இருந்தோ  படங்களை ட்வுன்லோட் செய்யும்போது அவற்றின் பெயர்கள் அனேகமாக உங்களால் புரிந்து கொள்ள முடியாத பெயர்களாக இருக்கும்.அந்த பைல்களின் பெயர்களை (File Name) நீங்கள் விரும்பியபடி மாற்றிக் கொள்ள நினைத்தால் ஒவ்வொன்றாக மாற்றாமல் ஒரே முறையில் எல்லா பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளும் வ்சதியை  விண்டோஸ் தருகிறது.

இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி எந்த வகையான பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். 

படங்கள் உள்ள போல்டரைத் திறந்து பெயரை மாற்ற வேண்டிய படங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள் பெயரை மாற்ற வேண்டிய படங்கள் அருகருகே இல்லாமல் வேவ்வேறு இடங்களில் இருக்குமாயின் Ctrl விசையை அழுத்தியவாறு படங்கள் மீது க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து File மெனுவில் அல்லது ரைட் க்ளிக் செய்து Rename தெரிவு செய்யுங்கள். பின்னர் அந்த பைலுக்குப் புதிய பெயரை டைப் செய்து Enter கீயை அழுத்துங்கள். நீங்கள் தெரிவு செய்த பைல்கள் அனைத்தும் வழங்கிய புதிய பெயரோடும் ஒரு தொடரிலக்கத்துடனும் மாறியிருக்கக் காண்லாம்.
உதாரணமாக முதல் பைலுக்கு beach (1 ) என வழங்கும்போது அடுத்த் பைல்கள் beach (2 ) என்றும் அடுத்தது beach ( 3 )என்றும் மாற்றமடையும்.

GOOGLE புதிய இசைக்கான சேவை

புதுமைகளை புகுத்துவதில் கூகுலுக்கு நிகர்  கூகுலே.இந்திய இசை ரசிகர்களுக்காகGOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும்Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.
      70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய எந்திரன் இந்தி பாடல்கள்வரை உள்ளது.இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான  சேவைகளை இன்னும் வழங்கவில்லை..மற்றும் தமிழ் பாடல்கள் குறைவாகவே உள்ளது.எதிர்காலத்தில் இவை நிவர்த்தி செய்ய படலாம் என்று எதிர்பார்க்கலாம்.  எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுல் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக.
     இணையத்தள முகவரி 

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார்
செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.

தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

”உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால்மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது பெட்எக்ஸ், இபே , கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!

”உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க’ என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி/ தினமலர்  

புகை என்னும் பகை

இன்றைய காலத்தில் புகைத்தல் சர்வசாதாரணமாக சமூகத்தில் காணப்படும் ஒரு மிகவும் கொடிய அடிமை பழக்கம் ஆகிவிட்டது.  இந்த பழக்கம் வயது வந்தவர்களையும் கடந்து சிறுவர்களையும் ஆக்கிரமித்து நிற்கிறது.பெண்கள் கூட இதற்கும் விதிவிலக்கு அல்ல.   இதற்க்கு முக்கிய பங்கை சினிமா தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.சினிமாவில் அவனவன் ஸ்டைல் என்ற போர்வையில் வித விதமாக கையை வளைத்து வளைத்து  பிடிப்பதை பார்த்து  அதை நாகரிக மாக கருதி இன்றைய இளசுகளும் புகைத்தலை நாடி செல்கிறார்கள்.இது  பெண்களை கவருவதற்கு ஒரு நாகரிக  கருவியாக மாறிவிட்டது என்றால் மிகை அல்ல.



 சிகரெட்டை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை சந்தை படுத்தும் போது அதன் பெட்டியிலே "சிகரெட் உடல் நலத்துக்கு கேடு" என்று கண்ணுக்கு தெரியக்கூடியவாறு அச்சடிச்சே அதை சந்தை படுத்துகிறது.வாங்குபவனும் அதை வாசித்துவிட்டு வாங்குகிறார்.காசு கொடுத்து தன் ஆயுளை குறைத்துக்கொள்கிறான்.இது யாரின் தவறு.சிகரெட் உடல் நலத்தை கெடுக்கும் என்று தெரிந்தும் அதை உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கிற அரசின் தவறா?,இல்லை மக்களுக்கு அது பாதிப்பு என்று தெரிந்தும் தங்கள் வருமானத்திற்காக, வியாபரத்திற்காக உயிர்க்கொல்லி மருந்துக்கு நிகரான சிகரெட்டை உற்பத்தி செய்து வெளியிடும் நிறுவனங்களில் தவறா?,இல்லை சிகரெட்டால் உருவாகும் பின்விளைவுகளை தெரிந்தும் அதை வாங்கி பாவிக்கிறானே அந்த பாவனயாளனின் தவறா? 
  
   உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.  உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.  இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும்,  அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர்.புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%,  விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%,  மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. 
     
   இங்கே ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகும் பொழுது பாதிக்க படுவது அவர் மட்டும் அல்ல.இவர் விடும் புகையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சு தன்மை அருகில் உள்ளவரையும் பாதிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க பட்ட ஒன்று. ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் ஒரு வருடத்தில் தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.

உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்.... புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.

  

    இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.புகைத்தலால் ஏற்ப்படும் நோய்களை தெரிந்துகொள்ள வேண்டும்.புகைத்தல் மூலம் செலவாகும் பணத்தை நினைத்து பார்க்க வேண்டும். தன்னுடைய புகைத்தல் பழக்கத்தால் தன் குடும்பமும் பாதிக்க படுவது இல்லாமல் தன் பிள்ளைகளும் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகரிக்கும் இதனால்அவர்களின் நல்ல எதிர்காலத்தை  எதிர்பார்த்து இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்.


      புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை ஓரிரு நாட்க்களில் நிறுத்தி விட முடியாது.முதலில் தங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும்.தங்களுக்கு பிடித்த விடயங்களில் அதிகளவு நேரத்தை  செலவழிக்கலாம். புகை பழக்கத்துக்கு மாற்றீடாக தேநீர் மற்றும் குளிர் பான வகைகளில் நாட்டம் செலுத்தலாம். தினமும் தியானம், உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் மனதை கட்டுப்படுத்தலாம். இன்று புகை மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை சீர் திருத்தி எடுப்பதற்கும் எவ்வளவோ மறு வாழ்வு மையங்கள் உள்ளன அங்கே சென்று நீங்கள் சிகிச்சை எடுக்கலாம்.

 

  உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்  என்றால் மேற் சொன்னவற்றை கடை பிடித்து உங்கள் வாழ்வை அழிக்கும் உயிர் கொல்லி பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் சிகரெட்டை பற்ற வைக்கும் போது எரிகிறது சிகரெட் மட்டும் அல்ல உங்கள் உடலும் தான்.


 
‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான்.
Click to get cool Animations for your MySpace profile

கல்விக்கடன் வாங்க போறீங்களா....




நன்றி: விகடன்

டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள்
பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய
அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன்
வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த
படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.


எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?


கல்விக்கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல்,
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற படிப்பு களுக்கு
கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்
உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில்
கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
அவர்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன்
கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால்
மட்டுமே கடன் வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ
படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.



எவ்வளவு கடன் கிடைக்கும்?


நான்குலட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம்
முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க
வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன்
கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும்
மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.

எப்படி வாங்குவது?


பெற்றோருக்குஎந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம்.
சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே
ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு
ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.



எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?


கல்விக்கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள்,
கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப்
உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

எப்படி கடன் வாங்குவது?


கல்லூரியில்இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு
எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு
வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள்,
கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில்
கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில்
சேர்த்துக் கொள்ளப்படும்.


எப்போது கடனை திரும்பக் கட்டுவது?


படிப்புமுடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த
ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட
ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி
கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு
கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம்
ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே
வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு
இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும்,
உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.


விரைவாககடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது.
மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத்
தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம்
பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை
குறைத்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்!


    கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
    கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
    பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
    இருப்பிடச் சான்றிதழ்.
    பள்ளி மாற்று சான்றிதழ்.
    10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.


பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார்,
கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க
வேண்டும்.



கவனத்தில் கொள்ள வேண்டியவை!

எக்காரணம்கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது.
ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன்
தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும்
எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.

ஏதாவதுஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன்
கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு
திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகை!


திரும்பச்செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச்
சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார்
படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை
உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை
மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.



கடன் தர தயக்கம்



கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப்
பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு
கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி
மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே
அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த
விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில
படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது
என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று
கடினம்தான்.

'மாணவர்கள் கடனைசரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் அதிகரிக்கும்’
என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன.
என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக
அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம்
மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மற்ற
வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.
கொடுக்கும்

கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும்
வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது.
படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்
பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை
வங்கியின் மேலாளர் ஒருவர்.

நன்றி: விகடன் 

Sunday 19 June 2011

அல்லோலபடும் சமசீர் கல்வி...




நன்றி rk guru 

தமிழகத்தில் இப்போது நடக்கும் சமசீர் நாடகங்களை பார்த்தால் கேளிக்குரியதாகத்தான் இருக்கிறது அடிபடையில் தமிழக ஆட்சியில் இருக்கும் அம்மையார் எங்கே படித்தார் என்பதை நாம் எல்லோரும் மறந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். அம்மா "டான் பாஸ்கோ" என்ற தனியார் பள்ளியில்தான் படித்தார். அப்பள்ளியில் படித்தவருக்கு தனியார் பள்ளி பாசம்தான் முழுவதும் இருக்கும். இதுவும் ஒருவித சாதி உணர்வுபோலத்தான். அதுவும் அம்மையாரின் சாதி எவ்வகை சாதி என்று உலகம் அறிந்தது அல்ல அப்படி இருக்கும் போது சமசீரை முடக்கும் வேலைதான் நடக்கும். இவர் கூட்டனி தோழர் விஜயராஜ் என்கிற விஜ்யகாந்த் சமசீர் கல்வியை பற்றி நல்ல தரமான கருத்தை உதித்தார். அது என்னவென்றால் "சமசீர் எனபது தனியார் பள்ளிகளில் என்ன என்ன வசதிகள் எல்லாம் கிடைக்கிறதோ அதுவெல்லாம் அரசு பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று கூவினார் அவர் கூவினது ஒருவிதத்தில் ஏற்றுகொண்டாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. வசதி வாய்ப்பு எனபது அவரவர் பொருளாதார அடிப்படையில் நிர்ணயக்கபடுவது ஆனால் அறிவில் ஏற்ற தாழ்வு இருக்கும்போதுதான் ஒருவரிடம் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது. உதாரணமாக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனும் அரசு பள்ளியில் படித்த மாணவனும் ஒரு நேர்முக தேர்வுக்கு போகிறார்கள் என்றால் அங்கு அறிவு அடிபடையில்தான் வேலை கிடைக்கிறது. அங்குதான் அரசு பள்ளி மாணவனின் தாழ்வு உணர்வு ஏற்படுகிறது. இது எனக்கும் ஏற்பட்ட உணர்வுதான்.

அறிவில் ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கிற அறிவு ஒன்று இருக்கிறது. தன் சுய முயற்சியினால் ஏற்படுகிற அறிவு ஒன்று இருக்கிறது. சுயமுயற்சி அறிவு இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் வருவது அப்தூல் கலாமுக்கு ஏற்பட்ட அறிவும் இப்படித்தான் ஆனால் அடிப்படை அறிவு எல்லா மாணவர்களுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டும் என்பதுதான் நம் எல்லோர் எண்ணம். வெள்ளையன் நம்மை ஆட்சி செய்ய வரும்போது வாணிப நோக்கத்துடன்தான் வந்தான் பின்பு மெல்ல மெல்ல உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான் அதுபோலத்தான் உள்ளது இப்போது உள்ள தனியார் பள்ளிகளின் லட்சணங்களும் முதலில் இவர்கள் சொன்னது அரசால் தரமான கல்வியை கொடுக்க முடியவில்லை நாங்கள் அதை கொடுப்போம் என்றார்கள் பின்பு மெல்ல மெல்ல அதிகபடியான கட்டணத்தை நிர்ணயத்தார்கள் அதன் பின் சங்கம் ஏற்படுத்தினார்கள். அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தைக்கு நடத்தினால் அதை புறக்கணிக்கும் நிலைக்கு வந்தார்கள். வெள்ளையனின் அடிப்படை வாணிப கொள்கையும், தனியார் பள்ளிகளின் கொல்லைகாரர்களின் கொள்கைகளும் சுரண்டல் அடிப்படையில்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் இவர்களின் சுரண்டல் முடிவு மக்களால் அடித்து துரத்தும் நிலையில்தான் இருக்கும்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் மகளை ஊராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்திருக்கிறார். இவரையே எல்லோரும் முன்மாதிரியாய் எடுத்து அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளிலே சேர்க்கவேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளின் திமீர் தனம் அடக்கப்படும்.

அறிவில் உயர்வு தாழ்வு இல்லாமல் சமசீரான சமத்துவம் உண்டாகவேண்டும் என்பதுதான் நல்ல உள்ளங்களில் விருப்பமும் அது போராட்டம் என்னும் ஆயுதத்தால் கட்டாயம் நிறைவேறும்.

தோழமைக்கு நன்றி... 

மனதை பாதித்த சாலை விபத்துக்கள்




நன்றி A.R.ராஜகோபாலன் 


                                இன்று வளர்ந்து வரும் வாகன பெருக்கத்திலும் நமது அவசர போக்குவரத்திலும் , தகுதி இல்லாத வாகன ஓட்டிகளாலும், குடி போதைகளாலும் , கவனக் குறைவுகளாலும் , முறையற்ற பாதுகாப்பற்ற போக்குவரத்தாலும், அவசியமே இல்லாத அவசரங்களாலும் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?????
ஒரு லட்சத்து முப்பத்தையிந்தாயிரம் பேர் (1,35,000), இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

         தமிழகத்தில் 2006​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 11,009 பேர். 2010​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15,409 பேர். 2007 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை 2006​ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2013​ஆம் ஆண்டு 20 சதவீதம் உயிர் இழப்பைக் குறைப்போம் என்ற கொள்கை முடிவை எடுத்தது. ஆனால், 2010​லேயே 40 சதவீதம் உயிர் இழப்பு அதிகரித்து இருக்கிறது. 5 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 59,870 பேர்.  

            உலகின் வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதம்; சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் என்ற புள்ளி விவரங்கள்,என் மனதை என்னவோ செய்கிறது.ஜப்பானில் ஒரு அணுகுண்டு வீசப்பட்டபோது, இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர்.இது, சுனாமியின் பாதிப்பை விட அதிகம்; பூகம்பங்களில் உயிர் இழப்பவர்களை விட அதிகம். ஆனால், இந்த இழப்பு, ஒவ்வொரு நாளும் பரவலாக ஏற்படுவதால் ஒட்டுமொத்த பாதிப்பு நமக்குப் புரிவது இல்லை. ஒவ்வொரு விபத்திலும் உயிர்களை இழப்பவர்களது குடும்பங்கள், வேதனையில் துடிக்கின்றன. அவர்களது எதிர்கால வாழ்வு இருண்டு போகிறது.அவர்களிப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கிறோமா நாம் , எதற்கடுத்தாலும் அவசரம் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் ஒரு சிறு இடைவெளி கிடைத்தாலும் புகுந்து வெளியே வர அவசரம், நாம் இல்லாது போனால் நம் குடும்பத்திற்கு யார் துணை என எண்ணிப்பார்த்தால் இப்படி கவனக்குறைவாக நடந்து கொள்வோமா??



    இந்த விஷயத்தில் போக்குவரத்து காவலர்களுக்கும் கொஞ்சம் பொறுப்பும் , வேலையில் கவனமும் தேவை சிக்னலை மீறும் வாகன ஓட்டிகளை இவர்கள் கண்டு கொள்ளுவதே இல்லை , நேற்று தி.நகரில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த  நான் எனக்கான சிக்னல் விழுந்ததும் என் வண்டியை செலுத்திய வேளையிலே எதிர்புறத்தில் இருந்து வந்த ஒரு பைக் என்னை மின்னலென கடந்து சென்றது , நான் கொஞ்ச வேகமாக எடுத்திருந்தாலோ  இல்லை அவன் சற்றுமெதுவாக வந்திருந்தாலோ ஒரு விபத்து நடந்திருக்கும் என்பது நிச்சயம், அவனின் அஜாக்கரதைக்கு அவன் விழட்டும் சாலை விதிகளை பின்பற்றும் நான் ஏன் பாதிக்க படவேண்டும்.இதை தேமே என்று பார்த்து கொண்டிருந்த அந்த போக்குவரத்து காவலரை என்ன செய்வது, தவறு செய்தால் தண்டிக்க படுவோம் என்ற எண்ணம் எந்த வாகன ஓட்டிகளுக்குமே இல்லை, அப்படியே அவர்கள் பிடிப்பட்டாலும் ஐம்பதோ  நூறோ கொடுத்து சரிக்கட்டிவிடலாம் என்ற எண்ணம் தான் அவர்களை இப்படி பொறுப்பின்றி செயல்படச் செய்கிறது, அந்த பணம் அவர்களுக்கோ அல்லது ஏதோ ஒரு அப்பாவிக்கோ போடும் வாய்க்கரிசி என்பதை அவர்கள் உணர்ந்தால் தான் மாற்றம் வரும்.

        இது ஒருமாதிரியான கொடுமை என்றால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் இன்னும் மோசமானது, அதுவும் இரவு நேரப்பயணம் மிகவும் ஆபத்தானது , முன்னே செல்லும் வாகனம் கண்களுக்கு தெரியவேண்டி, எரிய விடவேண்டிய சிவப்பு விளக்குகள் எந்த லாரியிலுமே எரிவதில்லை , சில பஸ்களிலும் இருப்பதில்லை இதையெல்லாம் எந்த போக்குவரத்து காவலரும் கவனிப்பது இல்லை , நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும் பணமே கண்ணாக இருப்பதால் இது மாதிரியான கொடுமைகள் நிகழ்கின்றன , அதுவும் சாலை திருப்பங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் தான் மிக அதிகமான விபத்துகள் நடக்கின்றன.



இதற்கல்லாம் என்ன தீர்வு என்பது நாம் அறியாத தெரியாத விஷயம் எல்லாம் அல்ல , தனி மனித ஒழுக்கமும் , மற்றவர்களின் உயிரின்மீதும் உடமையின்மீதும் இருக்க வேண்டிய மதிப்பும் மிக அவசியம்.நம்முடைய பொறுப்பற்ற செயலாலும் நமக்கும் மற்றவருக்கும் ஏற்ப்படும் இழப்பை என்ன செய்தாலும் திருப்பி தர முடியாது என்பதை மக்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும், அரசாங்கமும் அதன் பொறுப்பை உணர்ந்து சட்ட திட்டங்களை சீர்ப்படுத்தி கடுமையான தண்டனைகளை உறுதிப்படுத்தினால் இது மாதிரியான தேவை இல்லாத இழப்புகளை தடுக்கலாம், இது போன்ற சாலை விபத்தில் தன அமைச்சரவை சகாவையே இழந்த நம் முதல்வர் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம் , அதே போல் நாம் நல்ல முறையில் வாகனத்தை ஓட்டினால் மட்டும் போதாது எதிரே , அருகே வருபவரும் எப்படி ஓட்டுகிறார் என்பதை பார்த்து யூகித்து வாகனத்தை செலுத்தி சாலை விபத்துக்களை தடுக்கவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்



     இந்த ஒரு படமே சாலை விபத்தின் கோரத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லும் , ஆயிரம் வார்த்தைகள் சாதிக்காததை ஒரு படம் கொண்டு சேர்க்கும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இதை இணைத்துள்ளேன். இதை படித்த ஒருவராவது இனி நமக்கும் நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு வாகனம் ஓட்டுவேன் என முடிவு செய்தீர்களேயானால் அதுவே இந்த பதிவின் வெற்றி
நன்றி

நேற்று வரை இல்லாத காதல்...!




      னது இளமை காலம் பெரும் பகுதி மருத்துவமனையிலேயே கழிந்தது பெரிய குற்றங்களை செய்துவிட்டு சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளின் நன்னடத்தையைப் பொருத்து அவர்களை சில காலம் பெயிலில் வெளியே விடுவார்களாம் அதே போலத்தான் என்னையும் மருத்துவமனையில் இருந்து சில மாதங்களோ அல்லது சில நாட்களோ வீட்டிற்கு கூட்டி வருவார்கள்

அப்படி கூட்டி வரும் நாட்களில் தான் நான் பள்ளிக்கூடம் போவது நண்பர்களோடு விளையாடுவது என்று நடக்கும் நான் வீட்டில் இருக்கும் காலங்களில் எனது தந்தையாரும் கூட இருந்துவிட்டால் சைக்கிளில் வைத்து என்னை கோயில் அரசியல் கூட்டம் இலக்கியம் மேடைகளுக்கு கூட்டி போவார் அப்படி போக நேர்ந்தால் தூக்கம் தூக்கம் மாக வரும் எப்போதடா கூட்டம் முடியும் என்று பல நாள் விழிப்பிதுங்க காத்திருப்பேன்



  அதற்கு காரணம் இலக்கியவாதிகள் பேசுவது எதுவுமே எனக்கு புரியாது தமிழ் வார்த்தைகளைத் தான் அவர்கள் பயன்படுத்துவார்கள் ஆனாலும் எனக்கு அது வேறு ஏதோ பாஷை போல் இருக்கும் புரியாத விசயத்தை எப்படி இத்தனைபேர் ரசித்து கேட்கிறார்களே  என்றும் தோன்றும்

      இதனாலேயே தமிழ் இலக்கியங்கள் என்றவுடன் எனக்கு வெகுநாள் ஒரு பயம் இருந்தது புதியதாக ஒருவன் ஆங்கிலம் கற்க முற்படும் போது அவனுக்குள் எழும்பும் இதை நம்மால் கற்றுக் கொள்ள முடியுமா என்பது போன்ற இயல்பான பயம் அல்ல அது கஷ்டப்பட்டு புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எதவுமே அதில் இல்லை மனிதனின் அழகை இயற்கையின் வனப்பை வீரத்தின் செரிவை மிகைப்படுத்தி காட்டும் சாதாரண சங்கதியான தமிழ் இலக்கியத்தை கஷ்டப்பட்டு கற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற அலட்சியத்தில் உருவான அல்லது நிஜமான சோம்பேறித்தனத்தில் உருவான போலியான பயம் அது


      இந்த பயத்தால் நான் இழந்தது அளவிட முடியாதவைகள் என்று அப்போது எனக்கு புரியவில்லை எல்லோரும் புதுக்கவிதை எழுதுகிறார்கள் நாமும் அதையே எழுதினால் என்ன மரியாதை இருக்கிறது? கடினமானது என்றாலும் மரபுக் கவிதை தான் எழுதி பழக வேண்டும்மென ஒரு எண்ணம் மனதில் தோன்றிய போது செயல்படுத்த முனைந்த போது நான் இழந்தவைகளில் உள்ள மதிப்பு தெரிய ஆரம்பித்தது

      தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தவுடன் தமிழாசிரியர் புலவர் சு.கண்ணன் அவர்களை நாடினேன் அவர் கவிஞன் பெண்ணை வளவன் என்ற பெயரில் பல மரபுக் கவிதைகளை எழுதி தமிழுக்கு தந்தவர் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா போல குழந்தைகளும் தமிழிலக்கணத்தை மிக சுலபமாகவும் . சுகமாகவும் கற்றுக் கொள்ள பாட்டு வடிவில் பைந்தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் ஆங்கில மொழியே கலக்காமல் சுத்தமான தமிழில்தான் எப்போது உரையாடுவார் 


அவரிடம் சென்று இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டவுடனேயே சம்மதித்துவிட்டார் வாரத்தில் ஒரு நாள் வகுப்பிற்கு வரச் சொன்னார் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை 5 மணிக்கு அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து தமிழ் இலக்கணம் கற்ற அந்த நாளை மறக்கவே முடியாது

 ஒருநாள் அவர் உனக்கு சங்க பாடல் ஏதாவது தெரியுமா என்று கேட்டபோது பழந்தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாக எனக்கு நாட்டம் இல்லை அந்த தமிழ் நடையை புரிந்து கொள்வது கடினம் என்று பதில் சொன்னேன் அப்போது அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொன்னார் அப்பனும் பாட்டனும் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியாமல் வாழ நினைப்பவன் கண்களை முடிக்கொண்டு நெருப்புக் குண்டத்தில் விழுந்தவன் ஆவான் என்றார்

 இதை என்னால் எப்போதுமே மறக்க முடியாது எனது முன்னோர்கள் முட்டாள்களாக முழுமடையர்களாக வாழந்தார்கள் என்றால் நான் மட்டும் எப்படி அவர்களிடம் இல்லாத அறிவை பெற்றவன் ஆவேன்? எப்படி என்னால் மட்டும் தனியாக அறிவை பெற முடியும்? என் பாட்டனார் குதிரை சவாரி செய்து மெய்க்காப்பாளர்களோடு பயணம் செய்தவர் அவருடைய பேரனான நான் அப்படி போக முடியவில்லை என்றாலும் கூட சாராயம் குடித்துவிட்டு சாக்கடையில் புரளாமல் இருந்தாலே போதும் அவர் மரியாதையை காப்பற்றியவன் ஆவேன்  


   பழந்தமிழ் சங்க பாடல்களை படிப்பதனால் இலக்கிய சுவை கிடைக்கும் புதியதாக கற்பனை செய்ய வழி கிடைக்கும் முன்னோர்கள்களை பற்றிய அறிவுமாக கிடைக்கும் என்று எனக்கு தோன்றவே அவரிடம் அப்போதே சரித்திரம் படித்தால் கிடைக்கக் கூடிய அறிவு இலக்கியம் படித்தால் கிடைக்குமா? என பளிச் என்று கேட்டும் விட்டேன் மெலிதாக சிரித்த அவர் சரித்திரத்தில் எழுதப்பட்டவைகள் வெறும் விவரக் குறிப்புக்கள் தான்  அதில் உணர்வு இருக்காது காட்சிகள் இருக்காது இலக்கியம் அப்படி அல்ல அக்கால  சூழலை நமக்கு உள்ளப்படி காட்டுவது போலவே மனிதர்களின் உணவுர்களையும் அதையும் தாண்டி நிற்கும் உண்மைகளையும் நமக்கு காட்டும் என்றார்.

      அந்த நாள் முதற்கொண்டு சங்கப் பாடல்களில் மீதியிருந்த அலட்சியத்தையும் அச்சத்தையும் விலக்கி இதற்குள்ளும் ஏதோ ஒரு புதையல் இருக்கும் என்ற ஆர்வத்தில் தேடிப் பார்க்கலானேன் ஆரம்பத்தில் பழம் தமிழ் பாடல்களை உச்சரிக்க முடியாமல் நாக்கு தள்ளாடியது வார்த்தைகளை வாய்விட்டு சொல்லும்போது பற்கள் தந்தி அடித்தன ஒன்றுமே புரியாத ஆப்பிரிக்காவில் மாட்டிக்கொண்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது

  சுருக்கமாக சொல்வது என்றால் ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை. தெரியவில்லை என்று எந்த விஷயத்தையும் விட்டுவிடும் சுபாவம் எனக்கு எப்போதுமே கிடையாது புரியும் வரை போராடுவேன் வெற்றி பெறும்வரை போராட்டத்தை நிறுத்தவே மாட்டேன் நீயா நானா பார்த்து விடலாம் என சங்கப்பாடலோடு மல்லு கட்ட ஆரம்பித்தேன் கடைசியில் பாடல்கள் என்னை பார்த்து பரிதாபப்பட்டன இந்த மரமண்டைக்கு விளங்கிதான் தொலைப்போமே என்ற இரக்கத்தில் இரங்கி வந்தன

       பலாப்பழத்தைப் பிளந்து எண்ணைய் தேய்த்த குச்சியில் பலாப்பாலை உருட்டி எடுத்து சுளைக்குள் இருக்கும் கொட்டையை எடுத்து எறிந்து விட்டு மொய்க்க வரும் ஈயையும் துரத்தியடித்து சுளையை சுவைக்கும் போது கிடைக்கும் ஒரு சந்தோஷம் பழைய பாடல்கள் புரிய ஆரம்பித்தவுடன் கிடைத்தது முதல் முதலில் நான் படித்து புரிந்து கொள்ள முயற்சித்தது திருக்குறளில் உள்ள காமத்துப் பாலே ஆகும்

குறளை நான் தொட்ட போது என் வயது 22 அது விடலைப் பருவம் கவர்ச்சியை மட்டுமே அந்த பருவத்துக் கண்கள் பார்க்கும் எதில் ஆர்வம் இருக்கிறதோ அதிலிருந்து உனது முயற்சியை துவங்கினால் தான் சுலபமாக வெற்றியடைய முடியும் என நண்பர்கள் சொன்னதனால்அந்தப் பகுதியை படிக்கலானேன் இதை இங்கு சொல்லுகிறோம் என்ற வெட்கம் எனக்கில்லை உண்மையை சொல்கிறோம் என்ற திருப்திதான் வருகிறது காமம் .களவு. கோபம் இப்படி எல்லா அசுத்தங்களையும் கடந்து வந்தால் தானே அமைதி மரத்தில் சாந்தி பழத்தை பறித்து சுவைக்கலாம்.


     மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான ஆசைகள் வருகின்றது. தொட்டிலில் கிடக்கும் போது அம்மாவின் தாலாட்டை கேட்க ஆசைப்படுகிறோம் தொட்டிலை விட்டிறங்கி தளர் நடை பயிலும் போது விதவிதமான பொம்மைகள் மீது ஆசைப் பிறக்கிறது. அதன் பிறகு பம்பரம் .கோலி. கபடி என்ற தாண்டி மீசை முளைக்கும் பருவத்தில் ஆசையின் நிறம் மாறுகிறது

அந்த மாற்றமே பணத்தாசை. பதவியாசை என விரிந்து கடைசியில் உயிரின் மீது ஆசையாக முடிவடைகிறது ஆசைகள் பிறப்பதும் மாறுவதும் தவறல்ல அது இயற்கையின் விளையாட்டு ஆனால் சிலபேருருடைய ஆசை எதாவது ஒரிடத்திலேயே நிலைத்து நின்றுவிடுகிறது அப்போது தான் மனிதன் முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு அடிமையாகி புறப்பட்ட இடத்திலேயே நின்று விடுகிறான்.

 பம்பரம் விளையாடும் ஆசை பல் போன பிறகும் தொடர்ந்தால் எப்படி தவறோ அதே போலவே இளமைப் பருவத்தில் அறுப்பும் காதல் உணர்விற்கு தலை நரைத்து போன பிறகும் அடிமையாக கிடப்பது தவறுதல் ஆகும்   அந்த பருவத்தில் படித்த காமத்துப்பால் திருக்குறள் மனதை செம்மைப்  படுத்தியதே தவிர சஞ்சலப்படுத்தவில்லை


இரு நோக்கு அவளின் கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு மற்றொன்று அந்நோய்க்கு மருந்து என்ற குறட்பா பெண்மையின் விழியசையில் உள்ள நளினத்தை மட்டும் கற்பிக்கவில்லை பெண் மோகத்தில் உள்ள கம்பீரத்தையும் தலைக்குனிவையும் கூட கற்பித்தது.

      இப்படி உணர்வுகளை மட்டும்மல்ல அக்காலத்திய சமூக சித்திரத்தையும். பழம்தமிழ் பாடல்கள் நமது கண் முன்னால் தூசி தட்டி விரித்து வைக்கிறது நற்றிணையில் உள்ள ஒரு அழகான சித்திரத்தை இந்த இடத்தில் காண்பது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

 இளம் காதலர்கள் இருவர் ஒரு தன்னந்தனி தோப்பிற்க்குள் நடந்து வருகிறார்கள் மாலை இளம் சூரியனின் இதமான வெப்பமும்.குளிர் மிகுந்த தென்றலும் இருவர் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது அந்த சோலையில் ஒரு புன்னை மரம் நிற்கிறது அதன் அடர்ந்த நிழலில் உட்கார்ந்து இன்பக் கதைகள் பேச ஆசைப்படுகிறான் காதலன் ஆனால் வெட்கத்தோடு மறுக்கிறாள் காதல் தலைவி

 காரணம் என்னவென்று அவன் கேட்க இந்த புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும் என்று அவள் வீணை குரலில் கிசுகிசுக்கிறாள் மங்கைக்கு சகோதரி பச்சை மரமா என்று அவன் கேள்வி கேட்க துணியும் போதே அவளிடம் இருந்து பதிலும் வந்து விடுகிறது என் அம்மா குழந்தைப் பருவத்தில் இந்த சோலைக்கு வந்து தான் விளையாடுவாளாம் அப்பொழுது கேட்பாரற்று கிடந்த புன்னை மரம் விதை ஒன்றை எடுத்து மணலில் ஊன்றி வைத்தாளாம்


அவள் வாலிப பருவத்தை தொட்டப் போது அன்று ஊன்றிய விதை துளிர்த்து நிற்பதை கண்டாளாம் . அதன் நிழலில் தான் தோழிகளோடு விளையாடுவாளாம். அன்னை வளர்த்த மரம் என்பதால் இவளுக்கு இது அக்காவாய் ஆனதாம் இது உன் தமக்கை என்று அம்மா தான் அறிமுகம் செய்து வைத்தாளாம் .அதன் காரணமாக அக்கா முன் அத்தான் நீ தொட்டால் பற்றிக் கொள்ளாதோ  வெட்கம் மென விளக்கம் சொன்னாளாம் பொருளை புரிந்த பிறகு இந்த நற்றிணை பாடலை படித்துப் பாருங்கள்
        விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
        மறந்தனம் துறந்த காழ்முலை அகைய  
        நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
        நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று
        அன்னை கூறினள் புன்னையது சிறப்பே 
        அம்ம நாணுதும் தும்மொடு நகையே!

     இதில் என்னப்பெரிய விஷயம் இருக்கிறது ஜன்னிநோய் கண்டவன் உளறுவதுபோல காதல் நோய் வந்தவர்கள் அர்த்தமற்ற வார்த்தைகளை கூறி பிதற்றுவது வழக்கம் தானே என்று சிலர் கேட்கலாம் நானும் அப்படித்தான் ஒரு காலத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன் நேற்று வரை இல்லாத காதல் இன்று காலையில் அறும்பியவுடன் காதலனின் கருவாட்டு வால் மீசை ராஜராஜ சோழனின் கத்தி போல்இருக்கும் அவன் நாயை போல் வாலை சுருட்டிக் கொண்டு ஒடுவது கூட புலியும் சிங்கமும் கம்பீரமாக நடப்பது போல் தெரியும் 


ஆண்கள் மட்டும் இழைத்தவர்களாக என்ன? அவள் காலுக்கு செருப்பு வாங்கி கொடுக்க காசு இருக்காது ஆனால் அதை வெளிக்காட்ட முடியுமா உடனே மலரே நீ நடக்க பாதையெல்லாம் பூவிரித்தேன் என்பான் குளிக்காமல் நாற்றம் அடிக்கும் அவள் வியர்வையை செந்தேன் துளி எனச் சொல்லி  நம்மை அறுவருப்பு அடைய வைப்பான் அப்படித்தான் இந்த நற்றிணை காதலியும் எதையோ சொல்ல வந்து சொல்லத் தெரியாமல் மரம் எனக்கு அக்கா என்று உளறுவதுபோல் தோன்றும்.

       காதல் என்பதே ஒரு வித பைத்தியம் தான் அப்படிப்பட்ட பைத்தியக்கார பேச்சாக இந்த பாடலை நாம் எடுத்துக் கொள்ள முடியாது இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளின் பின்னனியை ஆராய்ந்தால் நமக்கு மலைப்பு ஏற்படுகிறது முதலில் காதலர்கள் நடந்துவரும் சோலையை எடுத்துக் கொள்வோம். இந்த சோலை காதலியின் அம்மா காலத்திலும் சோலையாகத்தான் இருந்திருக்கிறது இப்போதும் அப்படித்தான் இருக்கிறது இதில் நமக்கு கிடைக்கும் உண்மை பண்டைய கால தமிழன் இயற்கையை சிதைக்க முயலவில்லை அதை வளர்க்கவே விரும்பியிருக்கிறான் அதனால்தான் நாடும் நகரமும் வளமையோடு இருந்திருக்கிறது

மேலும் இந்த பாடலில் அவள் விதையை ஊன்றினாள்  என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்தாள் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை தண்ணீர் இல்லாமல் ஒரு விதை எப்படி மரமாகும் இங்கே ஆகியிருக்கிறது அப்படி என்றால் மாதம் மும்மாரி மழை பெய்தது என்று சொல்வது கற்பனை அல்ல. அலங்கார வார்த்தையல்ல நிஜமான உண்மையென்பது தெரியவரும். 


மாதம் தோறும் மழை வராவிட்டால் நிச்சயம் விதை துளிந்தவுடன் கருகி போகுமே தவிர வளர்ந்து மரமாகாது இன்னொரு விஷயம் இந்த சோலைக்கு தாயும் குழந்தைப் பருவத்தில் வந்திருக்கிறாள் மகளும் வந்திருக்கிறாள் எனும் போது இந்த சோலை ஊரிலிருந்து வெகு தொலைவில் இல்லை ஊருக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது ஊரே சோலையாக இருக்க வேண்டும்

இதில் எது நிஜம் என்றாலும் இப்போது போல் அந்த காலத்து மனிதன் வீடுகளைக் கட்டி குடியிருப்பதற்காக மரங்களையும் வனங்களையும் தேவையில்லாமல் அழிக்கவில்லை என்பது தெளிவாகிறது இது நற்றிணை பாடல் காட்சியின் சுற்றுச்சூழல் சார்ந்த சித்திரமாகும் இனி இதனுள் மறைந்து கிடக்கும் சமுதாயச் சித்திரத்தை பார்வையிடுவோம்.

        அம்மா ஊன்றினாள் மகள் அதை சகோதிரியாக கருதினாள் என்பது தான் பாடலின் பிரதான கருத்து நமக்கு நன்றாக தெரியும் அந்தக் காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி நம் நாட்டு ஆண்களுக்கு மட்டும் தான் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே குடும்பம் சொந்தமாக இருக்கிறது ஆனால் பெண்கள் நிலை அப்படியல்ல திருமணம் முடியும் வரை பிறந்த வீட்டை தன் சொந்த வீடு என்கிறாள் திருமணத்திற்க்கு பிறகோ நேற்று வரை தன்ககு சம்பந்தமே இல்லாத புதிய வீட்டாரை தனது உரிமையாக கொள்ள வேண்டிய நிலை வருகிறது

 நகை கொடுத்து பெட்டி நிறைய சீதனம் கொடுத்து கட்டில். மெத்தை.பீரோ. என்று எல்லாமும் கொடுத்து ஒரே ஒரு மஞ்சள் கயிற்றை படுபாவி பயல் கட்டிவிட்டான் என்பதற்காக பெற்றவரை மறந்து. உற்றவரை துறந்து கற்ற காலத்தில் கதை பேசிய தோழியன் நடப்பை சிதைத்து எங்கோ கண் காணாத இடத்திற்கு அவனோடு போக வேண்டிய நிலை உருவாகி விடுகிறது.

  ஆனால் நற்றிணை காட்சி இப்படி ஒரு சோக சித்திரத்தை நமக்கு காட்டவில்லை அம்மா போட்ட விதை மரமாகி நிற்பதை மகள் காண்கிறாள் என்றால் அம்மாவுக்கு மணமுடிந்ததும் அந்த ஊர்தான் மகள் காதலனோடு அதே சோலையில் நடமாடுகிறாள் என்றால் அறிமுகம் இல்லா புதிய ஆடவன் ஊருக்குள் இருக்கும் சோலைக்குள் சுதந்திரமாக நடமாட அந்தகாலத்தில் முடியுமா? இப்போது கூட புதிய நபர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நடமாடினால் நம்மால் சந்தேகப்படாமல் இருக்க முடியுமா?

ஆகவே மகளின் காதலனும் அந்த ஊர் காரணாகவே இருக்க வேண்டும் அல்லது பக்கத்து ஊர்காரணகவோ இருக்கலாம் இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் ஆதிகால தமிழன் வியாபாரம் அரசியல் காரணங்கள் தவிர தனிப்பட்ட வாழ்க்கை தேவைகளுக்கு போக்குவரத்தை அதிக தூரத்திற்கு வைத்துக்கொள்ளவில்லை குறிப்பிட்ட தூரத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறான் அதனால்தான் அவனது சமுக சூழல் பரபரப்பு இல்லாமல் அமைதியாக ஒரு ஓடையின் தண்ணீரை போல அமைந்திருக்கிறது

இப்படிதான் இன்றும் வாழ வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை நமது தேவைகளை குறைத்துக் கொண்டு பரபரப்பு இல்லாமல் வாழ்ந்தால் மனம் அமைதியாக இருக்கும் இரத்தக் கொதிப்பு இதயநோய் சர்க்கரை போன்ற சனியன்கள் எல்லாம் நம்மை தொட்டுக் கூட பார்க்காது இது சங்க இலக்கியம் தரும் ஒரு சின்ன தகவல் அவ்வளவுதான்

 இன்னும் ஏராளமான புதையல்கள் அதனுள் ஆழ்ந்தும் மறைந்தும் கிடக்கிறது அவைகளைப் பற்றி வேறு சில நேரத்தில் சிந்திப்போம்.          

Friday 17 June 2011

ஊடகங்களிடயே ஏன் இந்த மெளனம்



நன்றி அவர்கள் உண்மைகள்

சேனல்-4 என்ற தொலைக்காட்சி அம்பலப்படுத்திய ஸ்ரீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர செய்தி உலகளவில் பரபரப்பை உண்டாக்கி, தமிழ் மக்களின் மனதில் மட்டுமில்லாமல் ஐரோப்பிய மற்றும் மேலை நாட்டு மக்களின் மனதிலும் ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழக்கம் . ஆனால் சேனல் 4 ல் இந்த காட்சிகள் வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.



தமிழகத் தலைவர்கள் யாரும் இதுவரை இதைப்பற்றி ஏதும் கூறாமல வாய்முடி மெளனம் காட்பது எதனால்? உண்மைகள் துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் உருவாகுகிறது.

சேனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் சரணடைந்த ஒருவரை விடுதலைபுலி என்பதால் புறந்தள்ள முடியாது.



அத்தகையோரை பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து, இறக்கும் போது அவமானம் செய்து, இறந்த பின்னும் அவமானம் செய்து, இது எமது நாடு என்று சிங்களத்தில் கொக்கரிப்பதை பார்த்த பின்னரும் தமிழக ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன்..? தமிழகத்தின் ஊடகங்களில் சேனல் 4 - ண் இந்த செய்தி ஒரு சுனாமி போல வந்து விழுந்த போதிலும் . அவர்கள் காக்கும் உறை நிலை மௌனம் ஆயிரம் அர்த்தங்களை பேசுகிறது.

எல்லா ஊடகங்களும் மத்திய அரசால் கட்டுப்படுத்தப் படுகிறதா? ஏன் எந்த நிலமை? தமிழ் சகோதர சகோதரிகளின் உயிர் மதிப்பு இல்லாமல் போய்விட்டதா?



வெளியான சேனல் 4 தொலைக்காட்சி நடைபெற்றது மன்னிக்க முடியாத போர்க் குற்றமே என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. போரில் ஈடுபடாத கலைஞரான இசைப்பிரியா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கொன்று வீசப்பட்டிருக்கிறார். சரணடைந்த பெண் புலி உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு லாரிகளில் இழுத்து மிருகங்கள் போல எறியப்படும் காட்சிகள் வருகின்றன. மூன்று பெண்களை கைகளைக் கட்டிவிட்டு சுட்டுத்தள்ளுகிறார்கள். கைகளைக் கட்டி ஒருவரை சுடுவது போர்க்குற்றமாகும். காரணம் சரணடைந்துவிட்டார் என்பது கைகளை கட்டுவதன் அடையாளமாகும். அதன் பின்னர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட வேண்டுமே அல்லாது சுடுவதற்கு ஒரு படையினனுக்கு யாதொரு உரிமையும் கிடையாது.

இதை பார்த்த எனது மனம் துடிதுடிக்கிறது. தமிழ்க தலைவர்களே, தமிழக மக்களே இதை பார்த்த உங்கள் மனம் துடி துடிக்கவில்லையா?சூப்பர் ஸ்டார் உடல் நலமில்லை என்றதும் ஒடோடி சென்று பார்த்து கருத்து சொல்லிய தலைவர்களும் ஊடகங்களும் இப்போது எங்கே சென்றன அந்த நடிகர் தமிழக முதலைமச்சரிடம் பேசிய பேச்சை ஏதோ உலகில் நடக்காத அதிசியம் நடந்த்தை போல செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு இந்த செய்தி முக்கியமில்லையா? 

சமூகத்துக்குத் தேவைப்படும் பாலியல் பகுத்தறிவைப் பெற ஒரு கால் போதும் !





என்ன தான் இந்தியா பழம் பெரும் நாடு, புத்திஜீவிகள் பலர் வாழ்ந்த நாடு என பீற்றிக் கொண்டாலும். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த பகுத்தறிவுத் தனங்கள் கூட பிற்கால சமய எழுச்சிக் காலங்களுக்குப் பின் இல்லாமல் போனதே எதார்த்தம். குறிப்பாக இன்றையக் காலக் கட்டத்தில் பழைமையின் நன்மைகளையும், புதுமையின் நன்மைகளையும் உள்வாங்கி முன்னகரும் சமூகமாக நாம் இல்லாமல் இருக்கின்றோம். மாறாக பழைமையின் தீமைகளைத் தக்க வைத்துக் கொள்வதிலும், புதுமையின் தீமைகளையும் அயலகங்களில் இருந்து வாறி எடுத்து குழப்பமடைந்த சமூகமாக மாறிவருகின்றது. காரணம் சீரற்ற அரசுகளின் ஆட்சியில் இருப்பதாலே தான். அரசு என்பது வெறும் அரசு இயந்திரங்களை நடத்துவதற்கும், வரிகளை வசூலித்து சுவிஸ் வங்கிகளில் போடுவதற்கும் அல்ல. இது மக்களின் வாழ்வையும் சீராக மாற்றியமைக்க முனையவேண்டும். அதில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

இன்று சமூகத்தில் பாலியல் அறிவு என்பது மக்களில் பெரும்பாலானோருக்கு சுத்தமாக இல்லவே இல்லை எனலாம். பாலியல் அறிவு மட்டும் வந்துவிட்டால் போதாது, பாலியல் ஒழுக்கத்தையும், பாலியல் வரைவுகளையும் சீராகப் போதிக்கப்படல் வேண்டும். பாலியல் பகுத்தறிவு என்பது ஆணுறை விளம்பரங்களோடு நின்றுவிட்டன.

இருப்பினும் அரசு சிறிய முயற்சியாக ஜன்சாங்கிய ஸ்திரத கோஸ் என்றப் பெயரில் பாலியல் நலன், குடும்ப நலன், இனப்பெருக்கம் மற்றும் சிசுக்கள் நலன் தொடர்பாக ஒரு இலவச தொலைப்பேசி முனையத்தை நிறுவி உள்ளது. இந்த கால்-செண்டருக்கு அழைத்து குடும்ப மற்றும் பாலியல் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவி செய்கின்றார்கள். குறிப்பாக பதின்ம வயதில் இருப்போர், திருமணமானோர், திருமணமாகவிருப்போர் என அனைவருக்குமான ஒரு தகவல் மையம் இதுவாகும்.

அதற்கான தொலைப்பேசி இணைப்பு : 1800-11-6555 ( TOLL FREE )

இந்த நிலையத்தில் பணியாற்றுவோர் அனைவரும் தொழில்ரீதியாக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். புது தில்லியின் சென். ஸ்டீபன் மருத்துவமனை மருத்துவர்களின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டோரே இந்த கால் -செண்டரில் பணியாற்றுகின்றார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் கணனியின் பல்வேறுப்பட்ட தகவல்களையும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் உங்களின் பாலியல் சந்தேகங்கள் பலவற்றையும் இது தீர்க்கவல்லது.

பொதுவாக பாலியல் விடயங்களை குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் பல நேரங்களில் பேசுவது இல்லை. அப்படி பேசினாலும் அவர்களுக்கும் போதிய அறிவு இருப்பதில்லை. பல சமயங்களில் மரபுசார் நம்பிக்கைகளை பல பழமைவாதிகள் போதிய அறிவியல் ஆதாரங்கள் இன்றியும், பல நேரங்களில் திரித்தும் தவறான தகவல்களை தந்துவிடுவது உண்டு. அதனால் மக்களுக்கு சரியான பாலியல் அறிவினையூட்ட இந்த கால் செண்டர் இயங்கி வருகின்றது. இது பல கிராமப்புற மற்றும் நகரவாசிகளுக்கும் கூட பயன்படும். உங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதனையும் அவர்கள் கோருவதில்லை. நீங்கள் உரையாடுவது அனைத்தும் பத்திரமாக பாதுக்காக்கப்படும் என்பதால் அச்சமில்லாமல் உங்களின் கேள்விகளை அவர்களிடம் எடுத்து வைக்கலாம். அனைத்து இந்திய அங்கீகாரிக்கப்பட்ட மொழிகளிலும் தகவல்கள் கிடைக்கும்.

இந்த கால் -செண்டரின் ஒரே பின்னடைவு, சில சமயங்களில் காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் இருப்பதால் மேன்மேலும் இந்த சேவையை அரசு விரிவுப் படுத்த வேண்டும்.

குறிப்பாக அண்மையக் காலங்களில் வளரும் மக்கள் தொகையின் காரணமாக ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள், பாலியல் பிரச்சனைகள் எழுந்துவருகின்றன. குறிப்பாக பெண்கள் வீதம் வீழ்ச்சியடைந்த மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகள் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இத்தகவல்களை உங்களது உற்றார், உறவினர் எனப் பலரிடமும் பகிர்ந்துக் கொள்வதால் பாலியல் பகுத்தறிவினைப் பெறுவதற்கான முதல் படியை அனைவரும் தொடலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

தலையும் இல்லை தலைவரும் இல்லை


  ராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞன் ஒருவனை சமீப காலத்தில் சந்திக்க நேரிட்டது

அவன் தனது தாய் மண்ணை பற்றி ஏராளமான விஷயங்களை ஆர்வமுடன் என்னிடம் கேட்டறிந்தான்

 அப்போது அவன் இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மாநிலம் சுகந்திர போராட்ட காலத்தில் அதிகமான பங்கு பணியை ஆற்ற வில்லையே ஏன் என்று என்னிடம் கேட்டான்

 அவன் கேள்வி எனக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது

வேலு நாச்சியார் காலம் துவங்கி வடலி விளை ஜம்புலிங்கம் காலம் வரை எண்ணற்ற தேசிய தியாகிகளை தந்தது நம் தமிழகம்


 கட்டபொம்மனின் வீரம் சிதம்பரனாரின் துணிவு உலகம் அறியாதது அல்ல

 இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு துரத்த போர் கொடி பிடித்தது முதலில் தமிழர்கள் தான்

 ஆனால் தமிழர்களின் தியாகம் தொண்டு தமிழ்நாட்டிற்கு உள்ளயே முடங்கி போனதற்கு யார் காரணம்?

 அல்லது தமிழர்களின் சிறப்புகளை மற்றவர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்களா என்று பக்கம் சார்பில்லாமல் சிந்திக்கும் போது நமக்கு அதிர்ச்சி தான் மேலோங்கி நிற்கிறது

 உண்மையில் தமிழர் உலகம் என்பது மற்ற மக்கள் பலரால் இன்னும் கால் பங்கு கூட அறியாத நிலையிலேயே இருக்கிறது 

 நமது வள்ளுவரும் இளங்கோ அடிகளும் பாரதியும் இந்தியாவில் பலருக்கு அறிமுகம் இல்லாத பெயராகவே இருக்கிறது இதை முதலில் நாம் ஒத்துக் கொள்ள தயங்க கூடாது

 நமது தமிழ் அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற தமிழ் பெருமைகள் எல்லாம் புகழ்ச்சிகள் எல்லாம் நம்மை போலியாக திருப்தி படுத்துவதாகவே இருக்கிறதே தவிர உண்மையை சொல்வதாக இல்லை

 இந்த குறைகளுக்கு ஒட்டு மொத்தமாக அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறு

 தமிழ் அறிஞர்களும் தமிழ் குடிமக்களும் கூட காரணமாக இருக்கிறார்கள்

 நாம் நமது முதுகை பக்கத்து வீட்டுக்காரன் தட்டி கொடுத்தால் சந்தோசப் படுகிறோமே தவிர நமது புகழ் அண்டைய ஊர்க் காரனுக்கு தெரிந்திருக்கிறதா இல்லையா என்பது பற்றி அதிகம் அலட்டி கொள்வது கிடையாது


 பூனை கண்ணை மூடி கொண்டியிருப்பது போல இருக்கிறோம்

 இதனால் தான் தேசத்திற்கான நமது உழைப்பு பலரும் அறியமுடியாத வண்ணம் உள்ளது

வெளி மாநிலங்களிலும் தேசங்களிலும் தமிழன் என்பவன் சினிமாக்காரர்களின் கை பாவை

பெற்ற தாய்க்கு சோறு போடுகிறானோ இல்லையோ திரைப்பட நடிகர்களுக்காக கோஷம் போடுவான் காவடி தூக்குவான் என்ற எண்ணங்கள் தான் மேலோங்கி நிற்கிறது

தான் விரும்புகின்ற நடிகனின் விரல் நகம் உதிர்ந்து விட்டதற்காக மண் சோறு சாப்பிடும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு


 இதனால் தான் நமது தேச தலைவர்களின் மாண்புகள் குடத்திற்குள் வைத்த விளக்காக மங்கி கிடக்கிறது

காமராஜருக்கு பிறகு தேச அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் நம் தமிழ் நாட்டில் யாருமே இல்லை என்ற கவலையை அப்துல்கலாம் அவர்கள் ஓரளவு தீர்த்தாலும் மற்றவர்கள் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை

 மக்களிடம் தேசிய சிந்தனை இல்லாமல் போய் விட்டதனால் பெருந் தலைவர்கள் யாரும் உருவாக வில்லை அல்லது உருவாக விரும்ப வில்லை

 தமிழன் தமிழன் என்று மார்தட்டி கொள்வதனால் கண்ட பயன் யாதும் இல்லை

 தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்பவர்கள் மேடை தோறும் முழங்குவதனால் தமிழன் வளர்ந்து விட்டதாக கருதிவிட முடியாது


 இலங்கையில் தமிழன் செத்து மடிகிறான் மலேசியா சிங்கப்பூரில் அடிமை வாழ்வு வாழ்கிறான் ஆனால் தமிழக தமிழன் தொலைக் காட்சியில் தொடர்களை பார்த்து கண்ணிர் வடித்து கொண்டு இருக்கிறான்

இது தான் தமிழருக்காக உழைக்கும் தலைவர்களின் தொண்டுகளால் கிடைத்த பலன்

தேசிய அளவில் சக்தி மிக்க தலைவர் ஒருவர் நிஜமாகவே இருந்தால் உலக தமிழர்களின் இன்னலுக்காக இந்திய தேசமே இறங்கி வந்திருக்கும்

 ஆனால் நம் தலைவர்கள் மந்திரி பதவி கிடைப்பதர்க்காகவும் லஞ்ச பணத்தில் உண்டு கொளுப்பதர்க்காகவும் வடக்கு நோக்கி தொழுகிறார்களே தவிர வீறு கொண்டு எழுந்து உழைக்கிறார்கள் இல்லை

 நம்மை போன்றவர்களும் எழுதுவதிலும் பேசுவதிலும் படிப்பதிலும் காட்டுகின்ற சிறத்தையை செயலில் காட்டுவது இல்லை

  இதனால் தான் நமது முன்னோர்களின் உழைப்பும் புகழும் வரலாற்று பக்கங்களில் தூசி படிந்து கிடக்கிறது

 இந்த நிலையை மாற்ற நாம் தினசரி நமது குழைந்தைகளுக்கு தேச சேவையின் முக்கியத்துவத்தை போதிக்க வேண்டும்

  வாஞ்சி நாதன் திருப்பூர் குமரன் தில்லையாடி வள்ளியம்மை இன்னும் பலரின் தியாக வாழ்க்கையை உணரும் குழைந்தைகள் இந்தியாவின் தலைமையை நோக்கி வீர நடை போடுவார்கள்

 அப்போது தான் தமிழன் என்று சொல்லும் போதே தலை நிமிரும் அது வரை தமிழனுக்கு தலையும் இல்லை தலைவரும் இல்லை.